பெதப்பம்பட்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை


பெதப்பம்பட்டி அருகே சாலையோரம் கொட்டப்படும் குப்பைகள் அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 4 Nov 2020 6:04 AM GMT (Updated: 4 Nov 2020 6:04 AM GMT)

குடிமங்கலம் அருகே நெடுஞ்சாலை ஓரம் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குப்பையை அப்புறப்படுத்த பொது மக்கள் கோரிக்கை விடுத் துள்ளகர்.

குடிமங்கலம், 

பொள்ளாச்சியிலிருந்து பெதப்பம்பட்டி, குடிமங்கலம் வழியாக தாராபுரம் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகிறது. பெதப்பம்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் உப்பாறு ஓடையின் குறுக்கே போக்குவரத்து வசதிக்காக பாலம் கட்டப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை வழியாக தமிழகத்தின் உள்ள பகுதிகளுக்கு மட்டுமின்றி பக்கத்து மாநிலமான கேரளாவுக்கும் வாகனங்கள் சென்று வருகின்றன. பெதப்பம்பட்டி அருகே உள்ள பாலத்தின் கீழ் பகுதியில் குப்பை கழிவுகள் கொட்டப்பட்டு வந்த நிலையில் தற்போது மேல் பகுதியிலும் கட்டிட கழிவுகள் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மழைக்காலங்களில் உப்பாறு ஓடையின் வழியாக செல்லும் நீர் மாசடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.

நடவடிக்கை

பாலத்தின் வழியாக பகல் நேரங்களில் போக்குவரத்து அதிகமுள்ள நிலையில் இரவு நேரங்களில் மட்டுமே குப்பை கழிவுகள் மற்றும் கட்டிட கழிவுகள் கொட்டப்படுகிறது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலை வழியாக செல்லும் வாகனங்கள் மீது போலீசார் கண்காணிப்பை அதிகரிக்க வேண்டும். குப்பை கழிவுகளை கொட்டும் வாகனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். தேசிய நெடுஞ்சாலைகளில் குப்பை கொட்டும் செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தால் நெடுஞ்சாலை குப்பைத் தொட்டியாக மாறும் அவலம் உள்ளது.

Next Story