கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது கொலை செய்ததாக 2 பேர் கைது


கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது கொலை செய்ததாக 2 பேர் கைது
x
தினத்தந்தி 24 Nov 2020 11:44 PM GMT (Updated: 24 Nov 2020 11:44 PM GMT)

கல்பாக்கம் அருகே இறந்து கிடந்த பெண் அடையாளம் தெரிந்தது. அவரை கொலை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கல்பாக்கம், 

கல்பாக்கம் அருகே பெண் ஒருவர் இறந்து கிடந்தார். இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன் உத்தரவின் பேரில் மாமல்லபுரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு சுந்தரவதனம் தலைமையில் திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முனிசேகர் மற்றும் சதுரங்கப்பட்டினம் சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு ஆகியோர் கொண்ட தனிப்படையினர் விசாரித்து வந்தனர்.

விசாரணையில் இறந்து கிடந்த பெண் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த பவானி (வயது 17) என்பது தெரியவந்தது. இவரது தந்தையும், சகோதரரும் பிரிந்து சென்று விட்டனர். இந்த நிலையில் பவானியின் தாய் சுமதி (40) கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் ஆத்தூரில் இருந்து செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தை அடுத்த குழிப்பாந்தண்டலம் கிராமத்தில் வாடகைக்கு வீடு எடுத்து டிபன் கடை நடத்தி வந்தார்.

அங்கு வியாபாரம் சரி வர நடக்காததால் அங்கிருந்து கல்பாக்கம் அடுத்த வெங்கப்பாக்கம் கிராமத்தில் வீடு எடுத்து டிபன் கடை நடத்தியுள்ளார். அப்போது சதுரங்கப்பட்டினத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பாபு (30) என்பவர் அடிக்கடி டிபன் சாப்பிட சுமதி கடைக்கு வந்து செல்வார். நாளடைவில் சுமதிக்கும், பாபுவுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பகுதியிலும் வியாபாரம் சரி வர இல்லாததால் சுமதி தனது டிபன் கடையை ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மேட்டுப்பாளையத்துக்கு மாற்றியுள்ளார். பாபுவும் சுமதியுடன் அங்கே சென்று அவர்களுடன் வசித்தார். இந்த நிலையில் பாபுவுக்கும் சுமதியின் மகள் பவானிக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த விஷயம் சுமதிக்கு தெரிய வரவே பாபுவை தரக்குறைவாக பேசி வீட்டை விட்டு வெளியேற்றி விட்டார்.

திருமணம் செய்ய வற்புறுத்தல்

அதன் பின்னர் பாபு அங்கிருந்து சதுரங்கப்பட்டினத்துக்கு வந்து விட்டார். கொரோனா தொற்று பரவலால் டிபன் கடை நடத்த முடியாத சுமதி வருமானம் இல்லாமல் பவானியுடன் சொந்த ஊர் ஆத்தூருக்கு சென்று விட்டார். இந்த நிலையில் பாபு பவானியுடன் தொலைபேசியில் பேசி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பல முறை கேட்டுள்ளார். திருமணத்துக்கு பவானி மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 19-ந் தேதி பவானிக்கு போன் செய்த பாபு, அவரிடம் திருமணம் செய்யும்படி மறுபடியும் கேட்டுள்ளார். அதற்கு பவானி மறுப்பு தெரிவித்துள்ளார். தனக்கு ரூ.20 ஆயிரம் தரும்படி பவானி பாபுவிடம் கேட்டார். அவரது வங்கி கணக்கில் ரூ. 2 ஆயிரம் அனுப்பிய பாபு மீதியை நேரில் தருவதாக கூறியுள்ளார்.

இதையடுத்து சேலத்தில் இருந்து பவானி பஸ்சில் கிழக்கு கடல்கரை சாலை வெங்கம்பாக்கம் வந்து இறங்கினார். பஸ் நிறுத்தத்தில் பாபுவும் அவரது நண்பர் எலெக்ட்ரீசியன் வேலை செய்து வரும் சதுரங்கப்பட்டிகத்தை சேர்ந்த சிவகுமார் (36) என்பவரும் காத்திருந்தனர். சிவகுமார் தனது மோட்டார் சைக்கிளில் இருவரையும் அழைத்து கொண்டு சதுரங்கப்பட்டினம் போலீஸ் நிலையத்துக்கு பின்புறம் உள்ள பழுதடைந்த கட்டிடத்துக்கு சென்றனர். அங்கு பாபு திருமண பேச்சை ஆரம்பித்துள்ளார். அதற்கு பவானி மறுப்பு தெரிவித்தார்.

கொலை

இதனால் ஆத்திரம் அடைந்த பாபு பவானியின் கழுத்தை நெரித்தார். இதில் பவானி மயக்கம் அடைந்தார். அருகில் இருந்த கல்லை எடுத்து அவர் தலையில் போட்ட பாபு கோபம் தீராமல் அருகில் கிடந்த பீர் பாட்டிலை உடைத்து பவானியின் வயிற்றில் குத்தியுள்ளார். பவானி இறந்து விட்டார் என்பதை உறுதி செய்த பின்னர் பாபு தனது நண்பர் சிவகுமாருடன் மோட்டார் சைக்கிளில் அங்கிருந்து தப்பி சென்று விட்டார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

கைது

போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த சிவகுமார் ஆகியோரை நேற்று கைது செய்து திருத்தணி சிறையில் அடைத்தனர்.

Next Story