மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. அனுமதிக்காது உதயநிதி ஸ்டாலின் பேச்சு


மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. அனுமதிக்காது உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 30 Nov 2020 1:27 AM GMT (Updated: 30 Nov 2020 1:27 AM GMT)

மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. அனுமதிக்காது என்று, மல்லிப்பட்டினம் அருகே உதயநிதிஸ்டாலின் கூறினார்.

சேதுபாவாசத்திரம்,

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் தி.மு.க. மாநில இளைஞரணி செயலாளர் உதயநிதிஸ்டாலின் விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் என்ற பிரசார சுற்றுப்பயணத்தை மேற்கொண்டார். அவருக்கு சேதுபாவாசத்திரம் ஒன்றியம் மல்லிப்பட்டினத்தில் தஞ்சை தெற்கு மாவட்ட பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் சேதுபாவாசத்திரம் வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் மு.கி. முத்து மாணிக்கம் முன்னிலையில் ஏராளமானோர் உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செந்தலைப்பட்டினம் மீனவ கிராமத்தில் பள்ளிவாசல் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் மீனவர்கள் மத்தியில் உதயநிதிஸ்டாலின் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

சாகர்மாலா திட்டம்

மக்களை சந்தித்து பிரசாரம் செய்து வரும் என்னை தினமும் கைது செய்து எனக்கு புதிய உத்வேகத்தை அ.தி.மு.க. அரசு அளித்து வருகிறது. மீனவர்களுக்கும், சிறுபான்மையினருக்கும் எப்போதும் துணை நிற்பது தி.மு.க. தான். மீனவர்களுக்கு தீங்கு விளைவிக்கும் சாகர்மாலா திட்டத்தை தி.மு.க. தொடர்ந்து எதிர்த்து வருகிறது. மீனவர்களுக்கு எதிரான திட்டங்களை தி.மு.க. ஒருபோதும் அனுமதிக்காது

ஆனால் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் அவர் துறையை கவனிக்காததால் மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

தி.மு.க. ஆட்சி

பா.ஜனதா எதை செய்தாலும் அதை எதிர்க்க முடியாமல் அடிமையாக உள்ள அ.தி.மு.க.வை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். நீங்கள் அனைவரும் தி.மு.க.வுக்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். மீனவர்கள் அனைவரும் நம்பிக்கையோடு இருக்க வேண்டும். தமிழகத்தில் விரைவில் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமையும். தமிழகத்தில் தி.மு.க. ஆட்சி அமைந்த உடன் மீனவர்களின் கோரிக்கைகள் விரைவில் நிறைவேற்றப்படும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் நகர, ஒன்றிய பொறுப்பாளர்கள், இளைஞரணியினர் மற்றும் மீனவர்கள், பெண்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

பின்னர் உதயநிதிஸ்டாலின் பேராவூரணி அருகே முடச்சிக்காட்டில் உள்ள மறைந்த முன்னாள் அமைச்சர்எம்.ஆர்.கோவேந்தன் வீட்டுக்கு சென்று குடும்பத்தினரிடம் நலம் விசாரித்தார்.

விவசாயிகளுடன் கலந்துரையாடினார்

தஞ்சை மாவட்டத்தில் பிரசாரத்தை முடித்து விட்டு உதயநிதி ஸ்டாலின் திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதிக்கு வந்தார். அவருக்கு திருவாரூர் மாவட்ட எல்லையான முத்துப்பேட்டையை அடுத்த தம்பிக்கோட்டை கீழக்காட்டில் தி.மு.க. மாவட்ட செயலாளர் பூண்டி கலைவாணன் தலைமையில் ஒன்றிய செயலாளர் மனோகரன் உள்பட தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் கிழக்கு கடற்கரை சாலை வழியாக எடையூர்- சங்கேந்தி கடைத்தெருவிற்கு வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, திருத்துறைப்பூண்டி ஆடலரசன் எம்.எல்.ஏ. தலைமையில் ஒன்றிய செயலாளர் மனோகரன், முன்னாள் செயலாளர் சிவசாமி, மாவட்ட பிரதிநிதி அன்பழகன், இளைஞரணி விஜயன் உள்பட தி.மு.க.வினர் வரவேற்பு அளித்தனர்.

அதனை தொடர்ந்து பாண்டி சாகுபடி கோட்டகத்திற்கு சென்று விவசாய நிலத்தை பார்வையிட்ட உதயநிதி ஸ்டாலின் அங்கிருந்த விவசாயிகளிடமும், விவசாய பெண் கூலித்தொழிலாளர்களிடமும் கலந்துரையாடினார். பின்னர் அவர்களுடன் நின்று செல்பி எடுத்துக்கொண்டார்.பின்னர் தனது பிரச்சார பயணத்தை தொடர்ந்து திருத்துறைப்பூண்டி பகுதிக்கு சென்றார்.

Next Story