திருவண்ணாமலையில் வெறிச்சோடி காணப்பட்ட கிரிவலப்பாதை பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்


திருவண்ணாமலையில் வெறிச்சோடி காணப்பட்ட கிரிவலப்பாதை பக்தர்களை திருப்பி அனுப்பிய போலீசார்
x
தினத்தந்தி 30 Nov 2020 3:56 AM GMT (Updated: 30 Nov 2020 3:56 AM GMT)

கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக 2 ஆயிரத்து 668 அடி உயரமுள்ள மலையின் உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது. முன்னதாக நேற்று அதிகாலையில் கோவிலில் பரணி தீபம் ஏற்பட்டது. வழக்கமாக மகா தீபம் ஏற்றப்படும் நாளன்றும், தொடர்ந்து வரும் பவுர்ணமியன்றும் திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள். ஆனால் இந்த ஆண்டு கார்த்திகை மாத்திற்கான பவுர்ணமி நேற்று மதியம் 1.17 மணிக்கு தொடங்கி இன்று (திங்கட்கிழமை) மதியம் 2.23 மணிக்கு நிறைவடைகிறது. நேற்று மாலை 2 ஆயிரத்து 668 தடி உயரமுள்ள மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்பட்டது.

வழக்கமாக மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபத்தை தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி செல்வார்கள். மலை உச்சியில் ஏற்றப்படும் மகா தீபம் தொடர்ந்து 11 நாட்கள் காட்சி அளிக்கும். கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அமலில் உள்ளதால் மலை ஏறி மகா தீபம் தரிசனம் செய்யவும் தடை செய்யப்பட்டது. மேலும் நேற்று காலையில் நடந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பக்தர்களுக்கு அனுமதி ரத்து செய்யப்பட்டது. கிரிவலம் மற்றும் மகா தீபத்தை காண திருவண்ணாமலை நகரத்திற்குள் வருவதற்கு வெளியூர் பக்தர்களுக்கும் தடை விதிக்கப்பட்டு இருந்தது.

சோதனைச்சாவடி

இதற்காக திருவண்ணாமலை மாவட்டம் மற்றும் நகர எல்லையில் 15 இடங்களில் போலீசார் சோதனைச்சாவடி அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நேற்று திருவண்ணாமலை நகரத்தை சுற்றிலும், கிரிவலப் பாதையில் போலீசார் முழுமையாக தடுப்புகள் அமைத்து அவர்களது கட்டுபாட்டிற்குள் கொண்டு வந்தனர். போலீசார் உள்ளூர் மக்களை தவிர அத்தியாவசிய தேவையின்றி வரும் மக்களை திருவண்ணாமலை நகருக்குள் வர விடாமல் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர்.

நேற்று அதிகாலையில் இருந்தே பக்தர்கள் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல முயன்றனர். கோவில் மற்றும் பஸ் நிலையம் அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களை திருப்பி அனுப்பினர். மேலும் கோவிலை சுற்றி மாட வீதியில் போலீசார் பேரி கார்டுகள் மூலம் தடுப்புகள் அமைத்து இருந்தனர்.

திருப்பி அனுப்பினர்

கிரிவலம் செல்ல முயன்ற பக்தர்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில ஈடுபட்டனர். அவர்களை போலீசார் திருப்பி அனுப்பினர். அது மட்டுமின்றி போலீசார் தொடர்ந்து திருவண்ணாமலை நகரம் மற்றும் கிரிவலப் பாதையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட 5 வேன்கள் மூலம் திருவண்ணாமலை நகர பகுதியில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு காட்சிகள் பதிவு செய்யப்பட்டது. பக்தர்கள் கிரிவலம் செல்லாததால் கிரிவலப்பாதை வெறிச்சோடி காணப்பட்டது.

திருவண்ணாமலை ஈசான்ய மைதானம், அத்தியந்தல், திருக்கோவிலூர் சாலை உள்பட 4 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு பஸ்கள் நகரத்திற்கு வராமல் நகர எல்லை பகுதிகளிலேயே நிறுத்தப்பட்டது. கிரிவலம் செல்ல முடியாததால் பக்தர்கள் வேதனை அடைந்தனர்.

Next Story