கூடலூர் அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை


கூடலூர் அருகே நெற்பயிர்களை சேதப்படுத்தும் காட்டுயானைகள் இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 30 Nov 2020 5:41 AM GMT (Updated: 30 Nov 2020 5:41 AM GMT)

கூடலூர் பகுதியில் நெற்பயிர்களை காட்டு யானைகள் தொடர்ந்து சேதப்படுத்தி வருகின்றன. எனவே உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கூடலூர்,

கூடலூர் வனப்பகுதியில் காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகள் அதிகம் வாழ்ந்து வருகின்றன. இதனால் வனத்தை ஒட்டிய தேயிலை தோட்டங்கள் வழியாக காட்டுயானை உள்ளிட்ட வனவிலங்குகள் ஊருக்குள் அடிக்கடி புகுந்து பொதுமக்களுக்கு இடையூறு செய்து வருகின்றன. கூடலூர் கோத்தர்வயல், தோட்டமூலா, கெவிப்பாரா, பாடந்தொரை, தேவாலா உள்பட பல கிராமங்களுக்குள் காட்டுயானைகள் புகுந்து விவசாய பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

கூடலூர் அருகே பாடந்தொரை, மூச்சிக்கண்டி, சுண்டவயல், கர்க்கப்பாலி உள்பட பல குக்கிராமங்களில் 2 காட்டு யானைகள் கடந்த சில வாரங்களாக முகாமிட்டு வருகிறது. தற்போது கூடலூர் பகுதியில் பல ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் நன்கு விளைந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது. இதனால் அந்த பகுதிக்கு காட்டு யானைகள் வர தொடங்கி உள்ளது. அது போல் வரும் காட்டு யானைகள் வயல்களுக்குள் புகுந்து நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

மிதித்து சேதப்படுத்தியது

ஊருக்குள் முகாமிட்டுள்ள காட்டு யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதன்பேரில் வனத்துறை ஊழியர்களும் நேரில் வந்து காட்டு யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது வனப்பகுதிக்குள் செல்லும் காட்டு யானைகள் மீண்டும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது.

நேற்று முன்தினம் சுண்டவயல் பகுதியில் காட்டுயானைகள் இரவு நேரத்தில் புகுந்தன. அவை அனந்தன், சண்முகம் உள்ளிட்ட விவசாயிகளின் வயலில் நெற்பயிர்களை மிதித்து சேதப்படுத்தின. இதில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் இருந்த நெற்கதிர்கள் நாசமானது. இதனால் விவசாயிகள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இழப்பீடு வழங்குவது இல்லை

இது குறித்து விவசாயிகள் கூறியதாவது:-

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் மட்டுமே சுமார் 400 ஹெக்டேர் பரப்பளவில் நெற்பயிர்கள் ஆண்டுதோறும் விளைவிக்கப்படுகிறது. ஆனால் நெற்கதிர்களை அறுவடை காலம் நெருங்கும் போது காட்டு யானைகள் ஊருக்குள் அதிகளவில் வந்து சேதப்படுத்துகின்றன. இதனால் நாங்கள் பெரும் நஷ்டத்திற்கு ஆளாகிறோம். ஆனால் உரிய இழப்பீடு தொகையை வனத்துறை மற்றும் வேளாண் துறையினர் வழங்குவது இல்லை. காப்பீடு திட்டத்தில் நெற்பயிர்களை சேர்க்காததால் காப்பீடு செய்ய முடியாமல் உள்ளது.

எனவே காட்டு யானைகளால் ஏற்படும் நஷ்டத்தை ஈடுகட்ட இழப்பீட்டு தொகையை விரைவாக வழங்க வேண்டும். மேலும் நெற்பயிர்களை காப்பீடு செய்யவும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story