2,400 கி.மீ. கடல் வழியாக படகில் ‘திகில்’ பயணம்: ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்


2,400 கி.மீ. கடல் வழியாக படகில் ‘திகில்’ பயணம்: ஓமனில் இருந்து குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் சிக்கினர்
x
தினத்தந்தி 14 Dec 2020 5:54 AM GMT (Updated: 14 Dec 2020 5:54 AM GMT)

ஓமனில் இருந்து படகில் 2,400 கி.மீ. தூரம் ‘திகில்‘ பயணம் செய்து, குமரிக்கு தப்பி வந்த 6 மீனவர்கள் கடலோர பாதுகாப்பு குழும போலீசாரிடம் சிக்கினர். சம்பளம் வழங்காமல் சித்ரவதை செய்ததால், உயிரை பணயம் வைத்து தப்பி வந்ததாக தெரிவித்தனர்.

ராஜாக்கமங்கலம்,

குமரி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் ஏராளமானவர்கள் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அவ்வாறு மேல முட்டம், கீழ முட்டத்தை சேர்ந்த 5 மீனவர்கள் ஓமன் நாட்டில் வேலை செய்து வந்தனர். அந்த மீனவர்கள் ஓமனில் இருந்து படகில் தப்பி முட்டத்தில் உள்ள தனியார் மீன்பிடி துறைமுகத்திற்கு வந்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் விரைந்து வந்து மீனவர்களிடம் விசாரணை நடத்தினார்கள். இதில் பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

ஓமன் நாட்டில் சித்ரவதை

குமரி மாவட்டம் மேல முட்டம், பனி மாதா தெருவை சேர்ந்த சகாய ததேயுஸ் (வயது 46) என்பவர் தலைமையில் அதே ஊரை சேர்ந்த ஸ்டீபன் (52), ஜோசப் எட்வின் (40), பிரான்சிஸ் (58), கீழ முட்டம் அல்டோ (28) மற்றும் வங்காளதேசம் நாட்டை சேர்ந்த முகமது ரஜிப் உடின் (27) ஆகியோர் ஓமன் நாட்டில் அப்துல்லா கமீஷ் என்பவருக்குச் சொந்தமான விசை படகில் 14 மாதங்களாக வேலை செய்து வந்தனர்.

கடந்த 4 மாதங்களாக இந்த மீனவர்களுக்கு சம்பளம் வழங்கப்படவில்லை என்றும், பலமுறை கேட்டும், சம்பளம் வழங்காததால், குமரி மாவட்ட மீனவர்கள் இதுகுறித்து இந்திய தூதரக அதிகாரிகளிடம் முறையிட்டதாகவும், இதனால் ஆத்திரம் அடைந்த படகு உரிமையாளர் இந்திய தூதரகத்துக்கு எப்படி சென்றீர்கள் என கேட்டு அவர்களை தாக்கி சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது.

‘திகில்’ பயணம்

இதற்கு மேல் ஓமனில் இருந்தால், உயிருக்கு ஆபத்து ஏற்பட்டு விடும் என்று கருதிய 5 மீனவர்களும் குமரிக்கு வர முடிவு செய்ததாகவும், பாஸ்போர்ட் படகு உரிமையாளரிடமே இருந்ததால், படகிலேயே கடந்த 4-ந் தேதி புறப்பட்டனர். அந்த வகையில் சுமார் 2,400 கி.மீ. ‘திகில்‘ பயணம் மேற்கொண்டு நேற்று அதிகாலை குமரி வந்து சேர்ந்ததும் தெரிய வந்தது.

இதற்கிடையே விசை படகு உரிமையாளர் அப்துல்லா கமீஷ் ஓமன் நாட்டில் புகார் கொடுத்துள்ளார். அதனால் கடலோர பாதுகாப்பு குழும போலீசாருடன், கியூ பிரிவு மற்றும் மத்திய உளவு பிரிவு போலீசாரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே மீனவர்கள் ஊர் திரும்பிய தகவல் அறிந்ததும், அவர் உறவினர்கள் நேரில் சென்று பார்த்து உணவு கொடுத்து, அவர்களை வரவேற்றனர்.

கைது

இதுகுறித்து கடலோர பாதுகாப்பு குழும துணை சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் ஜான் கிங்ஸ்லி ஆகியோர் விசாரணை நடத்தி, ஆவணம் இல்லாமலும், அனுமதியின்றியும் குமரிக்கு வந்ததாக குமரி மீனவர்கள் 5 பேர் உள்பட 6 பேரையும் போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து மீனவர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகி ஒருவர் கூறுகையில், உயிரை பணயம் வைத்து குமரி மீனவர்கள் ஓமனில் இருந்து தப்பி வந்துள்ளனர். வரும் வழியில் எவ்வளவோ இடைஞ்சல்கள் அவர்களுக்கு ஏற்பட்டிருக்கும். எனினும் அவர்கள் திகில் பயணத்தை மேற்கொண்டுள்ளனர். ஓமன் நாட்டை சேர்ந்த படகு உரிமையாளர் சித்ரவதை செய்ததால் அவர்கள் இந்த முடிவுக்கு வந்திருக்கலாம் என்று தெரிவித்தார். 

Next Story