எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறாரா? கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் எடப்பாடி பழனிசாமி தாக்கு


எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறாரா? கமல்ஹாசன் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் எடப்பாடி பழனிசாமி தாக்கு
x
தினத்தந்தி 17 Dec 2020 11:07 PM GMT (Updated: 17 Dec 2020 11:07 PM GMT)

எம்.ஜி.ஆர்.போல் படத்தில் நல்ல கருத்துக்களை கமல்ஹாசன் கூறியிருக்கிறாரா?, அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்யமாட்டார் என்று முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

அரியலூர்,

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நடத்தி வருகிறார். அதன்படி அவர் நேற்று முன்தினம் கரூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு ஆய்வு கூட்டம் நடத்தினார். அதன் தொடர்ச்சியாக நேற்று அரியலூர் மாவட்டத்தில் ஆய்வு கூட்டம் மற்றும் ரூ.26 கோடியே 52 லட்சத்தில் 6 துறைகளைச் சேர்ந்த 14 திட்ட பணிகளுக்கு அடிக்கல் நாட்டு விழா, ரூ.36 கோடியே 73 லட்சம் மதிப்பீட்டில் 7 துறைகளில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள் திறப்பு விழா, 21 ஆயிரத்து 509 பயனாளிகளுக்கு ரூ. 129 கோடியே 34 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா ஆகியவை நடைபெற்றது.

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த இந்த விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி முடிவடைந்த பின்னர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் அவர் கூறியதாவது:-

கொரோனா பாதிப்பு குறைவு

தமிழக அரசு எடுத்த நடவடிக்கைகள், மருத்துவ வல்லுநர் குழுவினர் கொடுத்த அறிவுரைகளை அப்படியே நடைமுறைப்படுத்தியது போன்ற காரணங்களால் தமிழ்நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் கேரளா, டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் தற்போது கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசு எடுத்த முயற்சிகள் நல்ல பலனை தந்திருக்கிறது. ஆனால் எதிர்க்கட்சித்தலைவர் ஸ்டாலின் தமிழக அரசு ஒன்றும் செய்யவில்லை. ஒன்றும் நடக்கவில்லை என்றும் கூறிவருகிறார். என்ன நடக்கவில்லை என்று எங்களுக்கு தெரியவில்லை. எல்லாம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. மின்சாரத்துறை, போக்குவரத்துதுறை, கல்வித்துறை, சமூக நலத்துறையில் பலவிருதுகளை வாங்கியிருக்கிறோம். உள்ளாட்சித்துறையில் மட்டும் நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகளை வாங்கியிருக்கிறோம்.

முன்மாதிரி மாநிலம்

ஒரு ஆங்கில நாளிதழ் இந்தியா முழுவதும் சர்வே செய்து விருது கொடுத்து இருக்கிறார்கள். ஆனால் ஸ்டாலின் மட்டும் அதனை ஏற்றுக்கொள்ள மட்டேன் என்கிறார். ஒரு மாணவன் நன்றாக படிக்கிறானா? என்பதை அறிவதற்கு தேர்வு வைக்கிறார்கள். அந்த தேர்வில் பெறும் மதிப்பெண்ணை வைத்துதான் அவனது திறமை மதிப்பிடப்படும். அந்த வகையில் இன்று தேசிய அளவில் தமிழ்நாடு முன்மாதிரி மாநிலமாக திகழ்கிறது.

இந்தியா முழுவதும் இருக்கிற முதல்-அமைச்சர்கள் பங்கேற்ற பிரதமர் நடத்திய மாநாடு காணொலி மூலம் சமீபத்தில் நடந்தது. அதில் பேசிய பிரதமர் தமிழ்நாடு அரசு சரியான முறையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க எடுத்த முயற்சிகளின் காரணமாகவே அங்கு வெற்றி பெற்று இருக்கிறது. ஆகவே அதனை இந்தியாவில் உள்ள அனைத்து மாநில முதல்வர்களும் பின்பற்ற வேண்டும் என்று பிரதமர் கூறினார். அதுமட்டுமல்ல சிறப்பான முயற்சிகள் எடுத்த தமிழ்நாடு அரசை பாராட்டுகிறேன் என்றும் குறிப்பிட்டார். ஆக கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் பாரதப்பிரதமரின் பாராட்டை பெற்றது நமது அரசுதான். மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக திகழ்வதும் தமிழ்நாடு அரசுதான்.

இவ்வாறு அவர் கூறினார்.

உயர்கல்வி நிறுவனங்களில் தொற்று

இதனைத் தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிச்சாமி அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: சென்னை ஐ.ஐ.டி. அதனைத்தொடர்ந்து சென்னை அண்ணா பல்கலைக்கழகம் என உயர் கல்வி நிறுவனங்களில் கொரோனா தொற்று பரவியுள்ளது. ஆகவே இதனை விரைவாக கட்டுப்படுத்த தமிழக அரசு ஏதாவது சிறப்புத் திட்டத்தை செயல்படுத்துமா?

பதில் : அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றாத காரணத்தினால் தான் அந்த நிறுவனங்களில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கிறது. அதனை குறைப்பதற்கான நடவடிக்கைகள் அரசு சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது. அங்கு இருக்கிற மாணவர்கள் எல்லோருக்கும் பரிசோதனை நடத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது.

கேள்வி: மதுரையில் எய்ம்ஸ் மருத்துவகல்லூரி அமைப்பதற்கு தமிழகஅரசு உரிய நிலத்தை கையகப்படுத்தி ஒப்படைக்கவில்லை எனக் கூறப்படுகிறதே?

பதில்: அதில் சில நிலவகை மாற்றம் செய்யவேண்டி உள்ளது. அதனை விரைவாக செய்துமுடித்து ஒப்படைத்து விடுவார்கள். இதில் எந்த விதமான இடர்பாடும் இல்லை. அரசு உடனடியாக நிலத்தை கொடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளும். இதில் சிலப்பிரச்சினைகள் உள்ளன. அவையும் உரிய காலத்தில் சரிசெய்யப்படும்.

தமிழில்...

கேள்வி: மினிகிளினிக் திட்டம் கிராமப்புற மக்கள் பயன்அடையும் வகையில் உள்ளது. அந்த திட்டத்திற்கான பெயரை தமிழில் வைத்திருக்கலாமே?

பதில்: மினி என்றால் மக்களுக்கு எளிதாக தெரியும். அதற்காகத்தான் இந்த பெயரை வைத்திருக்கிறோம். வேறொன்றும் இல்லை. மக்களுக்கு புரியும் என்பதற்காக அந்தப் பெயரை வைத்துள்ளோம். தமிழில் சிறு என்று வரும். அந்த வார்த்தை மருத்துவமனைக்கு அந்தளவிற்கு பொருத்தமாக இருக்காது.

கவுரவ விரிவுரையாளர்கள்

கேள்வி : அரசு கலைக்கல்லூரிகளில் 3,500 கவுரவ விரிவுரையாளர்கள் நிரந்தர பணியாளர்களாக மாற்றம் செய்யப்படுவார்களா?

பதில்: அதாவது இப்போது சட்ட விதிகளுக்கு உட்பட்டுதான் நியமிக்க முடியும். இப்போது எல்லோருமே நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். நீதிமன்றம் சில அறிவிப்புகளை வெளியிடுகிறது. ஏற்கனவே மத்தியஅரசு சிலவிதிமுறைகளை வகுத்து இருக்கிறது. எனவே அதையெல்லாம் பார்த்து அவை சட்டத்திற்கு உட்பட்டு இருந்தால்தான் எதுவும் செய்யமுடியும்.

கேள்வி: கங்கை கொண்ட சோழபுரத்தை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழனுக்கு அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படுமா?

பதில்: அரசு கொறடாவும், ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினரும் இதுகுறித்து ஏற்கனவே தெரிவித்து உள்ளார்கள். அது அரசின் பரிசீலனையில் உள்ளது.

நன்மை செய்வதாக இல்லை

கேள்வி: தமிழகத்தில் அரசு அதிகாரிகள் பலர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைதுசெய்யப்பட்டு வருகிறார்கள். இதுகுறித்து கமல்ஹாசன் அரசு எவ்வழியோ அவ்வழியேதான் அதிகாரிகளும் செயல்படுவதையே இதுகாட்டுகிறது என்று கூறியுள்ளாரே?

பதில் : அரசாங்கம்தான் லஞ்சஒழிப்பு கைதுநடவடிக்கையை நடத்துகிறது. தமிழ்நாட்டில் உள்ள லஞ்ச ஒழிப்பு வழக்குகள் யார்மீது வருகிறது. அப்படியென்றால் தமிழகஅரசு சிறப்பாக செயல்படுகிறது என்றுதானே அர்த்தம். எங்கேயும் தவறு நடக்ககூடாது என்பதற்காகத்தான் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தவறுகளை தடுத்து நிறுத்தவேண்டும் என்ற எண்ணத்தின் அடிப்படையில் தான் நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அவர் (கமல்ஹாசன்) புதிதாக கட்சி ஆரம்பித்து இருக்கிறார். அவருக்கு என்ன தெரியும். சினிமாவில் ஓய்வு பெற்றவர்.. அவருக்கு 70 வயதாகிறது. இந்தவயதில் டி.வி. நடத்தி கொண்டிருக்கிறார்.

டி.வி. நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் செய்தால் என்னவாகும்?. அப்படிப்பட்ட ஒரு தலைவன் சொல்லக்கூடிய கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தை கெடுப்பதுதான் அவரது வேலை. நாடு நலம்பெற எத்தனையோ நல்ல திட்டங்கள் இருக்கிறது. நதிகள் இணைப்புத்திட்டம், விவசாயிகளுக்கு செய்யக்கூடிய திட்டம் உள்ளது. அதைப்பற்றி அவர் கூறலாம். மாணவ செல்வங்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறலாம். எம்.ஜி.ஆர். இருக்கும்போது பாடல்கள் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துக்களை கூறினார். கமலஹாசன் ஒரு படத்திலாவது நாட்டுமக்களுக்கு நல்ல கருத்துக்களை கூறியிருக்கிறாரா?. நன்மை செய்யக்கூடிய பாடல்களை பாடியிருக்கிறாரா?. எனவே அவர் சொல்லக்கூடிய கருத்துக்களை பெரிதாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை.

இவ்வாறு அவர் கூறினார். 

Next Story