வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு


வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சியில் அமர வைக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
x
தினத்தந்தி 10 Jan 2021 5:46 AM GMT (Updated: 10 Jan 2021 5:46 AM GMT)

வருகிற சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க மக்கள் முடிவு செய்து விட்டனர் என்று விழுப்புரம் பிரசாரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் நேற்று 2-வது நாளாக பிரசாரத்தை தொடர்ந்தார். முதல் நிகழ்ச்சியாக விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் வணிகர்கள், இருளர்கள், நரிக்குறவர்கள், திருநங்கைகள் ஆகியோருடன் கலந்துரையாடினார். அதன் பின்னர் பூத் கமிட்டி பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

நான் ஒரு நாள் அல்லது 2 நாட்கள் பிரசாரம் செய்துவிட்டு அடுத்த தொகுதி, அடுத்த மாவட்டம் என்று சென்று விடுவேன். கடைசி வரை வாக்காளர்களுடன் நேரில் தொடர்பில் உள்ளவர்கள் நீங்கள்தான். வெற்றியை உறுதி செய்வதும் நீங்கள்தான். அதனால் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வரை மக்களுடன் இருந்து வெற்றிக்கனியை பறித்துத்தர வேண்டும். 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற வேண்டும் என்ற நம்பிக்கையோடு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும். கடந்த சட்டமன்ற தேர்தலில் வெறும் 1½ சதவீத வாக்குகள் வித்தியாசத்தில் மட்டுமே வெற்றி வாய்ப்பை இழந்து ஆட்சியை பிடிக்க முடியாமல் போனது. இந்த தேர்தலில் அதற்கு இடமளிக்கக்கூடாது.

விழிப்புணர்வுடன் செயல்படுங்கள்

மோடியின் மிகச்சிறந்த அடிமை யார் என்று எடப்பாடி பழனிசாமிக்கும், ஓ.பன்னீர்செல்வத்திற்கும் ஒரு போட்டியே வைக்கலாம். அந்தளவிற்கு அவர்கள் 2 பேரும் குனிந்து, குனிந்து தமிழக உரிமைகளை விட்டுக்கொடுத்துள்ளனர். இதையெல்லாம் கிராமம், கிராமமாக சென்று மக்களிடம் எடுத்துக்கூற வேண்டும். தேர்தல் நாளன்று நாம் அனைவரும் மிக விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். விழுப்புரம் மத்திய மாவட்டத்தில் உள்ள 4 சட்டமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றோம் என்ற செய்தியை தலைவரிடத்தில் வந்து சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கரும்பு பாக்கித்தொகை

அதனை தொடர்ந்து முண்டியம்பாக்கம் தனியார் சர்க்கரை ஆலை முன்பு கரும்பு விவசாயிகளை சந்தித்தும், விக்கிரவாண்டியில் கட்சி கொடியேற்றி வைத்தும், கோலியனூர் கூட்டுசாலையில் பொதுமக்கள் மத்தியிலும் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், தமிழகத்தில் தற்போது மக்கள் நலன் பற்றி சிந்திக்காத ஊழல் ஆட்சி நடைபெற்று வருகிறது. கரும்பு விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலை மற்றும் கூட்டுறவு சர்க்கரை ஆலையிலிருந்து ரூ.100 கோடி பாக்கியுள்ளது. அதை தி.மு.க., ஆட்சிக்கு வந்தவுடன் விவசாயிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

உரிமையை பறிக்கிறார்கள்

வருகிற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க., பா.ஜ.க.வை ஓட, ஓட விரட்டி தி.மு.க.வை ஆட்சிக்கட்டிலில் அமர வைக்க தமிழக மக்கள் முடிவு செய்து விட்டனர். கஜா, ஓக்கி புயலின்போது தமிழகத்திற்கு கேட்ட நிவாரண தொகையை வழங்க மத்திய அரசு மறுக்கிறது. அ.தி.மு.க. அரசும், மோடி அரசுக்கு அடிபணிந்து தமிழக உரிமைகளை விட்டுக்கொடுக்கின்றனர். தற்போது புதிய கல்வி கொள்கையை கொண்டு வந்து நமது கல்வி உரிமையை பறிக்கிறார்கள்.

இந்த ஆட்சியாளர்கள், மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கொள்ளையடித்து வைத்துள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கு மடிக்கணினி வாங்கியதில் ரூ.2 ஆயிரம் கோடி ஊழல் செய்திருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

கல்விக்கடன் ரத்து

தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் கண்டிப்பாக நீட் தேர்வு ரத்து செய்யப்படும். அதுபோல் மாணவர்களின் கல்விக்கடனும் ரத்து செய்யப்படும்.

நாங்கள் சொல்வதையே செய்வோம், செய்வதையே சொல்வோம். தி.மு.க. ஆட்சியில்தான் ரூ.7 ஆயிரம் கோடி விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கியதும் எங்கள் ஆட்சியில்தான். தற்போது பா.ஜ.க. அரசு, அந்த திட்டத்தை முடக்க நினைக்கிறார்கள். வேளாண் சட்டங்களை எதிர்த்து தலைவர் ஸ்டாலின், தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார். டெல்லியில் விவசாயிகள் 50 நாட்களாக தொடர் போராட்டம் செய்து வருகின்றனர். விவசாயிகளுக்கு எதிரான இந்த சட்டங்களை எல்லா கட்சிகளும் எதிர்க்கிறார்கள். ஆனால் நானும் விவசாயிதான் என்று சொல்லிக்கொள்ளும் எடப்பாடி மட்டும்தான் ஆதரித்து வருகிறார்.

வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு

1987-ம் ஆண்டு இடஒதுக்கீடு கேட்டு போராடிய வன்னியர்கள் 23 பேரை அப்போது ஆட்சியில் இருந்த அ.தி.மு.க. அரசு சுட்டுக்கொன்றது. அடுத்து தி.மு.க. ஆட்சிக்கு வந்த நேரத்தில் மிக பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் வன்னியர் சமுதாயத்தை சேர்த்து இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. அதோடு இட ஒதுக்கீட்டு போராட்டத்தில் துப்பாக்கிச்சூட்டிற்கு பலியான வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த 23 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்தை தி.மு.க. நிதியுதவி அளித்து உயிர்த்தியாகம் செய்தவர்களை இட ஒதுக்கீட்டு போராட்ட தியாகிகளாக அங்கீகரித்து, அவர்களின் குடும்பங்களுக்கு மாதந்தோறும் பென்ஷன் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி இட ஒதுக்கீட்டு போராட்டத்திற்காக 42 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது போடப்பட்டிருந்த அனைத்து வழக்குகளும் ரத்து செய்யப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

சிறுபான்மையினருடன் கலந்துரையாடல்

இந்நிகழ்ச்சி முடிந்ததும் வளவனூரில் வேனில் ஊர்வலமாக சென்ற அவர், அங்குள்ள மக்களை சந்தித்து பேசினார். தொடர்ந்து, கண்டமங்கலத்தில் கட்சி கொடியேற்றி வைத்தார். அதன் பின்னர் மாலை 4 மணிக்கு கோட்டக்குப்பத்தில் பிரசாரத்தை தொடங்கிய அவர், அங்குள்ள மீனவர்களை சந்தித்து பேசினார். அந்த சந்திப்பு முடிந்ததும் சிறுபான்மையினரை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, திருச்சிற்றம்பலம் கூட்டுசாலை, தைலாபுரம் ஆகிய இடங்களில் பொதுமக்கள், விவசாயிகள் மத்தியில் பிரசாரம் செய்தார். இந்த பிரசார நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு இரவு உதயநிதி ஸ்டாலின், கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னைக்கு புறப்பட்டுச்சென்றார்.

இதில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., மத்திய மாவட்ட செயலாளர் நா.புகழேந்தி, டாக்டர் பொன்.கவுதமசிகாமணி எம்.பி., மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் செ.புஷ்பராஜ், மாநில மருத்துவ அணி இணை செயலாளர் டாக்டர் ரா.லட்சுமணன், மாநில தீர்மானக்குழு செயலாளர் ஏ.ஜி.சம்பத், மாநில விவசாய அணி துணை செயலாளர் அன்னியூர் சிவா உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story