நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு: சேதம் அடைந்த இடங்களில் அமைச்சர்கள் ஆய்வு


நெல்லை கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளத்தை, அமைச்சர்கள் பார்வையிட்டபோது
x
நெல்லை கருப்பந்துறை ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்துச் சென்ற வெள்ளத்தை, அமைச்சர்கள் பார்வையிட்டபோது
தினத்தந்தி 15 Jan 2021 9:15 PM GMT (Updated: 15 Jan 2021 7:23 PM GMT)

நெல்லை தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதையொட்டி சேதம் அடைந்த இடங்களை, அமைச்சர்கள் உதயகுமார், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் ஆய்வு செய்தனர்.

வெள்ளப்பெருக்கு
மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வரும் கனமழையால் நெல்லை மாவட்டத்தின் பிரதான அணையான பாபநாசம், மணிமுத்தாறு, சேர்வலாறு மற்றும் தென்காசி மாவட்டத்தில் உள்ள கடனாநதி, ராமநதி ஆகிய அணைகளில் நீர்மட்டம் முழு கொள்ளவை எட்டியதை அடுத்து அணைகளில் இருந்து அதிகபட்சமாக 62 ஆயிரம் அடி தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டது. இதனால் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. நெல்லை குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவிலை வெள்ளம் சூழ்ந்து, கோபுரம் மட்டும் வெளியே தெரிந்தது. மேலும் ஆற்றின் கரையோரம் உள்ள கோவில்கள், மண்டபங்களும் மூழ்கின.

பாபநாசம், விக்கிரமசிங்கபுரம், ஆலடியூர், நெல்லை சந்திப்பு, மீனாட்சிபுரம், சிந்துபூந்துறை ஆகிய பகுதிகளில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, முகாம்களில் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுத்தது. தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் வந்து பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் பகுதியில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். நெல்லையிலும் இந்த மீட்பு படையினர் இரவு பகலாக மும்முரமாக பணியாற்றினார்கள்.

அமைச்சர்கள் பார்வையிட்டனர்
இந்த நிலையில் நேற்று முன்தினம் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் அடங்கிய குழுவினர் நெல்லை மாவட்டத்திற்கு வந்து, வெள்ள சேதங்களை பார்வையிட்டனர்.

நெல்லை சந்திப்பு கருப்பந்துறை பகுதியில் மேலப்பாளையம், டவுன் தாமிரபரணி ஆற்றுப்பாலத்தை மூழ்கடித்து சென்ற வெள்ளத்தை பார்வையிட்டனர். மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அந்த பகுதி 
மக்களையும் பார்த்து ஆறுதல் கூறினார்கள். அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்தனர்.

இழப்பீடு
இதைத்தொடர்ந்து அமைச்சர் உதயகுமார் நிருபர்களிடம் கூறுகையில், அணைகளில் இருந்து படிப்படியாக நீர்திறப்பு குறைக்கப்பட்டு வருகிறது. இதனால் அபாயகரமான சூழ்நிலை இல்லை. தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்கள் பாதுகாப்பாக நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பயிர் சேதங்கள் கவலை அளிக்கிறது. எனினும் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் அனைவருக்கும் நிவாரணம் வழங்க முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நெல்லை மாவட்டத்தில் மழையால் 18 வீடுகள் இடிந்துள்ளன. அவர்களுக்கும் உரிய நிவாரணம் வழங்கப்படும் என்றார்.

ஆய்வு கூட்டம்
பின்னர் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அமைச்சர் உதயகுமார் தலைமையில் அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் விஷ்ணு, எம்.எல்.ஏ.க்கள் ரெட்டியார்பட்டி நாராயணன், சண்முகநாதன், சின்னப்பன், நெல்லை மாவட்ட கூட்டுறவு தலைவர் தச்சை கணேசராஜா, ஆவின் தலைவர் சுதா பரமசிவம், முன்னாள் எம்.பி. விஜிலா சத்தியானந்த், மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள், நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் தீபக் எம்.டாமோர், துணை கமிஷனர் சரவணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன், நெல்லை மாநகராட்சி ஆணையாளர் கண்ணன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மந்திராச்சலம், நெல்லை உதவி கலெக்டர் சிவா கிருஷ்ணமூர்த்தி, அ.தி.மு.க. 
மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பரணி சங்கரலிங்கம், ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, சூப்பர் மார்க்கெட் தலைவர் பல்லிக்கோட்டை செல்லத்துரை உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story