குடியாத்தம் அருகே காளைவிடும் விழாவில் சீறிப்பாய்ந்த காளைகள்; 13 பேர் காயம்


வி.மத்தூர் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த காளையை படத்தில் காணலாம்.
x
வி.மத்தூர் கிராமத்தில் நடைபெற்ற காளை விடும் விழாவில் சீறிப்பாய்ந்து வந்த காளையை படத்தில் காணலாம்.
தினத்தந்தி 17 Jan 2021 9:00 PM GMT (Updated: 17 Jan 2021 6:51 PM GMT)

குடியாத்தம் அருகே வி.மத்தூர் கிராமத்தில் நடந்த காளைவிடும் விழாவில் 239 காளைகள் சீறிப்பாய்ந்தன. இதில் 13 பேர் காயமடைந்தனர்.

காளை விடும் திருவிழா
வேலூர் மாவட்டம், குடியாத்தத்தை அடுத்த வி.மத்தூர் கிராமத்தில் காளை விடும் விழா நேற்று நடந்தது. இதில் குடியாத்தம், கே.வி.குப்பம், லத்தேரி, காட்பாடி, பேரணாம்பட்டு, வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், ஆந்திர மாநிலம் வேதமூர், சித்தூர், பங்காருபாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 239 காளைகள் கலந்துகொண்டன. காளைகளின் உரிமையாளர்கள் கொரோனா பரிசோதனை சான்று கொண்டு வந்து அதிகாரிகளிடம் காட்டிய பின்பு காளை விடும் விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டனர்.

காளை ஓடும் வீதிகளின் இருபகுதியிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டிருந்தன, விழா தொடங்குவதற்கு முன்பு கால்நடை மருத்துவர்கள் காளைகளை பரிசோதனை செய்தனர். தொடர்ந்து போட்டிகளில் 
பங்கு பெற்ற காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன.

13 பேர் காயம்
காளை விடும் விழாக்கு ஆனந்தன், வாசுதேவன், நரசிம்மன் ஆகியோர் தலைமை தாங்கினர். முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் ரமேஷ் வரவேற்றார். விழாவை குடியாத்தம் உதவி கலெக்டர் ஷேக்மன்சூர், தாசில்தார் வத்சலா ஆகியோர் தொடங்கி வைத்தனர். கிராம நிர்வாக அலுவலர்கள் சசிக்குமார், ரமேஷ் உள்ளிட்ட வருவாய்த்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

காளைகள் முட்டியதில் 13 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு அங்கு அமைக்கப்பட்டிருந்த மருத்துவ முகாமில் முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.

குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் முரளிதரன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் வேலு, செயலாளர் முனியப்பன் உள்பட விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள், இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

Next Story