காஞ்சீபுரம் அருகே கணவர் பேச மறுத்ததால் இளம்பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்


காஞ்சீபுரம் அருகே கணவர் பேச மறுத்ததால் இளம்பெண் தற்கொலை; காப்பாற்ற சென்ற கணவர் படுகாயம்
x
தினத்தந்தி 20 Jan 2021 11:48 PM GMT (Updated: 20 Jan 2021 11:48 PM GMT)

காஞ்சீபுரம் அருகே கணவர் பேச மறுத்ததால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார்.

தகராறு

காஞ்சீபுரத்தை அடுத்த ஓரிக்கை ரத்தின நகர், விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜவேல். இவரது மனைவி ரேவதி (வயது 32). இவர்களுக்கு திருமணமாகி 6 ஆண்டுகள் ஆகிறது. 5 வயதில் சாய்சரண் என்ற ஆண் குழந்தை உள்ளது..

ராஜவேல் ஒரகடத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். கணவர் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வர தாமதமானதால் கணவன்-மனைவிக்குள் தகராறு ஏற்பட்டு ராஜவேல் மனைவியிடம் பேசாமல் இருந்து வந்தார்.

கணவர் பேசவில்லையே என மனமுடைந்த ரேவதி கடந்த 21.11.2020 அன்று வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். மனைவியின் அலறல் சத்தம் கேட்டதும், ராஜவேல் உடனடியாக அவரை காப்பாற்ற முயன்றதில் இருவருக்கும் காயம் ஏற்பட்டது.

சாவு

இதையடுத்து அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று ரேவதி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

ராஜவேலின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது குறித்து காஞ்சீபுரம் நகர துணை போலீஸ் சூப்பிரண்டு மணிமேகலை தலைமையில் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜகோபால் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.

இது குறித்து ஆர்.டி.ஓ. வித்யா விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story