மயிலம் அருகே சினிமா பட பாணியில் பரபரப்பு சம்பவம்: 2 வீடுகளில் கத்திமுனையில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை


மயிலம் அருகே சினிமா பட பாணியில் பரபரப்பு சம்பவம்: 2 வீடுகளில் கத்திமுனையில் ரூ.7 லட்சம் நகை, பணம் கொள்ளை
x
தினத்தந்தி 24 Jan 2021 4:57 AM GMT (Updated: 24 Jan 2021 4:57 AM GMT)

மயிலம் அருகே 2 வீடுகளில் கத்திமுனையில் ரூ.7 லட்சம் நகை, பணத்தை முகமூடி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.

மயிலம்,

விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள சின்னநெற்குணம் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 57). இவர் அதே ஊா் தபால் நிலையத்தில் தபால்காரராக வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு தனது குடும்பத்துடன் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவு 1.30 மணியளவில், அவரது வீட்டின் பின்பக்க கதவை யாரோ மர்ம மனிதர்கள் உடைக்கும் சத்தம் கேட்டது.

முகமூடி கொள்ளையர்கள்

இதையடுத்து வெங்கடேசன் எழுந்து பார்த்தார். அதற்குள் வீட்டிற்குள் முகமூடி அணிந்தபடி 6 பேர் திபுதிபுவென புகுந்தனர். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் கூச்சலிட முயன்றார்.

அதற்குள் மர்ம மனிதர்களில் ஒருவர் கத்தியை எடுத்து வெங்கடேசன் கழுத்தில் வைத்ததுடன், சத்தம்போட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். பின்னர் வெங்கடேசன், அவரது மனைவி சுமதி (45), மகள் ராகவி(23), சுமதியின் தந்தை துரைக்கண்ணு(72) ஆகியோரை ஒரு அறைக்குள் தள்ளி பூட்டி சிறை வைத்தனர். அப்போது அவர்கள் கையில் இருந்த 4 செல்போன்களையும் கொள்ளையர்கள் பறித்துக்கொண்டனர். தொடர்ந்து பீரோ கதவை உடைத்து அதில் இருந்த 12½ பவுன் நகை, ரூ.60 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்தனர்.

கைக்குழந்தையின் கழுத்தில் கத்தி

தொடர்ந்து கொள்ளையர்களில் ஒருவர் மட்டும் வெங்கடேசன் வீட்டில் இருந்தபடி, அறைக்குள் பூட்டி வைத்திருந்தவர்களை கண்காணித்துக் கொண்டு இருந்தார்.

மற்ற 5 பேரும், அருகில் உள்ள குமார் வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு குமாா் மகன் நீலமேகத்தின் 8 மாத கைக்குழந்தையான ரித்திக்கை கையில் தூக்கிய கொள்ளையர்கள், அந்த பிஞ்சு குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினர்.

கூச்சலிட்டால் அனைவரையும் கொலைசெய்துவிடுவோம் என்று கூறினர். இதனால் வீட்டில் இருந்த குமார், அவரது மனைவி அமுதா(52), மகன்கள் நீலமேகம்(31), முருகன்(18), நீலமேகம் மனைவி சூர்யா(24) ஆகியோர் அமைதியாக என்ன செய்வது என்று தெரியாமல் இருந்தனர்.

அவர்களை ஒரு அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கிருந்த 5 பவுன் நகை, ரூ 5 ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்தனர்.

மேலும் அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறித்துக் கொண்டனர்.

செல்போன்களை வீசி சென்றனர்

கொள்ளையர்கள் அதோடு நின்றுவிடாமல், அருகில் உள்ள பூட்டிக்கிடந்த குணசேகரன் என்பவரது பண்ணை வீட்டுக்குள் புகுந்தனர். அங்கு எதுவும் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

இதையடுத்து, 2 வீடுகளிலும் பூட்டி சிறை வைக்கப்பட்டு இருந்தவர்களை திறந்து விட்டுவிட்டு, அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி சென்று விட்டனர். அப்போது, வெங்கடேஷ், குமார் வீட்டில் இருந்து எடுத்துச்சென்ற 7 செல்போன்களையும் செல்லும் வழியில் ஆங்காங்கே வீசி சென்றுவிட்டனர்.

போலீஸ் விரைந்தது

சினிமா பட பாணியில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி அறிந்த போலீஸ் சூப்பிரண்டு ராதாகிருஷ்ணன், திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன் மற்றும் மயிலம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். மேலும் கொள்ளையர்கள் குறித்து வீட்டில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

சம்பவ இடத்துக்கு மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. கொள்ளை நடந்த வீடுகளில் இருந்து ஓடிய மோப்பநாய் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலை வரைக்கும் ஓடிச் சென்று நின்றது. மேலும் தடயவியல் நிபுணர் நேரில் வந்து சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த தடயங்களை சேகரித்தார்.

வலைவீச்சு

கொள்ளை போன பொருட்களின் மொத்த மதிப்பு ரூ.7 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த புகார்களின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மூகமுடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் மயிலம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story