தைப்பூச திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த குன்றத்தூர் முருகன் கோவில்


தைப்பூச திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்த குன்றத்தூர் முருகன் கோவில்
x
தினத்தந்தி 29 Jan 2021 4:08 AM GMT (Updated: 29 Jan 2021 4:08 AM GMT)

தைப்பூச திருவிழாவையொட்டி குன்றத்தூர் முருகன் கோவில் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்தது.

பூந்தமல்லி, 

தைப்பூச திருவிழாவையொட்டி முருகன் கோவில்களில் விசேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அதன்படி புகழ்பெற்ற குன்றத்தூர் முருகன் கோவிலில் நேற்று விசேஷ பூஜைகள் நடைபெற்றது.

முன்னதாக அதிகாலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு பால், பன்னீர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் காவடி எடுத்து வந்தும், அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தி சாமி தரிசனம் செய்தனர்.

சிறப்பு பஸ்கள்

கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் எளிதில் வந்து செல்லும் வகையில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் வகையில் குன்றத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அதிகாலையில் இருந்தே அதிக அளவில் பக்தர்கள் திரண்டதால் கோவிலின் படிக்கட்டுகள் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் போனதால் கூடுதலாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு இருந்தனர். மேலும் பக்தர்கள் உள்ளே செல்லவும் வெளியே வரவும் ஒரே வழி அமைக்கப்பட்டு இருந்ததால் கடும் நெரிசல் ஏற்பட்டது. ஆங்காங்கே கயிறுகள் அமைத்து பக்தர்களை தடுத்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் ஆலப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட இருங்குன்றம் பள்ளி மலைமீது அமைந்துள்ள பாலமுருகன் கோவிலில் தைப்பூச திருவிழா நேற்று நடந்தது. இதில் மாலை அணிந்து விரதம் இருந்த பக்தர்கள் மாமண்டூர் பாலாற்றங்கரையில் இருந்து காவடி எடுத்தும் அலகு குத்தியும் தங்களது நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பக்தர்கள் பால் குடங்களை சுமந்தபடி ஊர்வலமாக வந்து முருக பெருமானுக்கு அபிஷேகம் செய்தனர்.

சிங்க பெருமாள்கோவிலில் உள்ள சிங்கை சிங்காரவேலன் கோவிலில் தைப்பூச திருவிழாவையொட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதில் திராளான பக்தர்கள் கலந்து கொண்டு முருகனை வழிப்பட்டனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

குமரகோட்டம் முருகன் கோவில்

கந்தபுராணம் அரங்கேறிய திருத்தலமாக விளங்கும் காஞ்சீபுரத்தில் உள்ள புகழ் பெற்ற குமரகோட்டம் முருகன் கோவிலில் மூலவர் மற்றும் முருகபெருமானுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. பின்னர் மலர் அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி தெய்வயானையுடன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Next Story