காஞ்சீபுரம், திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்


காஞ்சீபுரம், திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
x
தினத்தந்தி 16 Feb 2021 5:03 PM GMT (Updated: 16 Feb 2021 5:03 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, ஓய்வூதியத் தொகை, வீட்டுமனைப்பட்டா, பசுமை வீடுகள், திருமண உதவித்தொகை, குடும்ப அட்டை, பட்டா மாற்றம், விதவை உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை ஆகிய பல கோரிக்கைகள் அடங்கிய 246 மனுக்களை மாவட்ட கலெக்டரிடம் பொதுமக்கள் வழங்கினர்.

இந்த மனுக்களின் மீது நடவடிக்கை எடுத்திட மாவட்ட கலெக்டர் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். மேலும், கூட்டத்தில் 5 மனுதாரர்களுக்கு முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணைகளையும் வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வ.மகாராணி, தனித்துணை ஆட்சியர் ஆர்.சுமதி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் முத்துசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த திரளான பொதுமக்கள் பசுமை வீடு, வேலைவாய்ப்பு, வீட்டுமனைப்பட்டா, சட்டம்-ஒழுங்கு இதர மனுக்கள் என மொத்தம் 245 கோரிக்கை மனுக்களை அளித்தனர்.

அந்த மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட வருவாய் அலுவலர் அதன் மீது தக்க நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Next Story