கழிவுநீரை சுத்தம் செய்தபோது பரிதாபம் கிணற்றில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி


கழிவுநீரை சுத்தம் செய்தபோது பரிதாபம் கிணற்றில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பலி
x
தினத்தந்தி 18 Feb 2021 6:20 AM GMT (Updated: 18 Feb 2021 6:20 AM GMT)

மதுரவாயலில் கழிவுநீரை சுத்தம் செய்தபோது கிணற்றில் விஷ வாயு தாக்கி தொழிலாளி பரிதாபமாக பலியானார்.

பூந்தமல்லி, 

மதுரவாயல் அடுத்த ஆலப்பாக்கம், பாக்கியலட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் நித்யா. இவரது வீட்டின் தரைத்தளத்தில் அமைந்துள்ள உறை கிணற்றில் சென்னை மாநகராட்சி சார்பில் கொடுக்கப்படும் குடிநீர் இணைப்பை இணைத்துள்ளனர்.

இந்தநிலையில் அவர்களது வீட்டு கழிவுநீர் இணைப்பில் லேசான உடைப்பு ஏற்பட்டதால், கிணற்று நீரில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசியது. இதனை அகற்றுவதற்காக மதுரவாயலைச் சேர்ந்த ரவி (வயது 52), காசி (52), ஆகியோர் வரவழைக்கப்பட்டு, நேற்று காலை 30 அடி ஆழம் கொண்ட உறை கிணற்றில் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது இருவருக்கும் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், காசியை மேலே ஏற்றி விட்டு ரவி பின்னர் ஏற முயன்றுள்ளார். ஆனால் அதற்குள் விஷவாயு தாக்கி ரவிக்கு மூச்சுத்திணறியது. அதற்கு தாக்கு பிடிக்க முடியாமல் மேலே ஏற முயன்றும் அவரால் மேலே வர முடியவில்லை. ரவியை மீட்க காசி முயன்றும் முடியாததால், அவர் அங்கேயே மயங்கி விழுந்தார்.

தொழிலாளி பலி

இதையடுத்து மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி மயங்கி கிடந்த தொழிலாளி ரவியை மீட்டனர்.

அதன்பின்னர் அவரை சோதித்துபார்த்தபோது, அவர் இறந்து விட்டது தெரிந்தது. இதுகுறித்து மதுரவாயல் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே, அவர்கள் விரைந்து வந்து இறந்து போன ரவியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை செய்து வருகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து மதுரவாயல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story