சோழிங்கநல்லூரில் கத்தி முனையில் நகை, செல்போன் பறிப்பு; 2 பேர் கைது


சோழிங்கநல்லூரில் கத்தி முனையில் நகை, செல்போன் பறிப்பு; 2 பேர் கைது
x
தினத்தந்தி 19 Feb 2021 5:20 AM GMT (Updated: 19 Feb 2021 5:20 AM GMT)

சோழிங்கநல்லூரில் கத்தி முனையில் நகை, செல்போன் பறிக்கப்பட்டது தொடர்பாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சோழிங்கநல்லூர், 

சென்னை தேனாம்பேட்டை கணேசபுரம் பகுதியை சேர்ந்தவர் சரத்குமார் (வயது 25). கார் டிரைவராக உள்ளார். கடந்த 5-ந்தேதி நிகழ்ச்சி ஒன்றுக்கு தனது நண்பருடன் கோவளம் சென்றுவிட்டு அதிகாலை 3 மணி அளவில் பழைய மாமல்லபுரம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். சோழிங்கநல்லூர் குமரன் நகர் பகுதிக்கு வந்த அவர்கள் டீ குடிக்க மோட்டார் சைக்கிளை நிறுத்தி உள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் கத்தி முனையில் அவர்களிடம் இருந்த 2 செல்போன்களையும், அவர் அணிந்து இருந்த 2 பவுன் தங்கச்சங்கிலியையும் பறித்துக்கொண்டு சென்றுவிட்டனர்.

2 பேர் கைது

இதுகுறித்து சரத்குமார் செம்மஞ்சேரி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின்பேரில் துரைப்பாக்கம் உதவி காவல் ஆணையர் ஜான் விக்டர் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெய்கணேஷ் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் அங்கு உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

நகை மற்றும் செல்போன் பறிப்பில் ஈடுபட்டவர் கண்ணகி நகரை சேர்ந்த ஆண்ட்ரூஸ் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிள், கத்தி, 2 செல்போன்களை போலீசார் கைப்பற்றினர்.

Next Story