செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை-மகள்-மகன் பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை


செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி தந்தை-மகள்-மகன் பலி தற்கொலையா? போலீஸ் விசாரணை
x
தினத்தந்தி 1 March 2021 5:59 AM GMT (Updated: 1 March 2021 5:59 AM GMT)

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகள், மகன் என 3 பேர் பலியானார்கள். மகள், மகனை ஏரியில் தள்ளிவிட்டு தானும் ஏரியில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பூந்தமல்லி,

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே உள்ள புதுவட்டாரம், திருவள்ளுவர் நகர், கண்ணதாசன் தெருவைச் சேர்ந்தவர் உஸ்மான் (வயது 39). தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவருடைய மகள் அப்சனா (11), மகன் சுகில் (7).

இவர்களில் அப்சனா, அரசு பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பும், சுகில் தனியார் பள்ளியில் 2-ம் வகுப்பும் படித்து வந்தனர்.

நேற்று மதியம் உஸ்மான் தனது மகள், மகன் மற்றும் உறவினரின் மகன் ஆகியோருடன் செம்பரம்பாக்கம் ஏரியை சுற்றிப்பார்க்க வந்தார். ஏரியின் 6-வது மதகின் அருகே நின்று தண்ணீர் நிரம்பி கடல்போல் காட்சி அளிக்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் அழகை ரசித்துக்கொண்டு இருந்தனர்.

நீரில் மூழ்கி பலி

ஏரியின் உள்புறத்தில் உள்ள படிக்கட்டு வழியாக ஏரியின் கரையோரம் நின்றபடி ஏரியை பார்த்து கொண்டிருந்த அப்சனா, திடீரென ஏரிக்குள் தவறி விழுந்துவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவருடைய தம்பி சுகிலும் ஏரிக்குள் குதித்தார்.

தனது மகள், மகன் இருவரும் ஏரியில் விழுந்துவிட்டதை கண்டு திடுக்கிட்ட உஸ்மானும் ஏரிக்குள் குதித்து இருவரையும் காப்பாற்ற முயன்றார். ஆனால் ஏரி முழுவதும் நிரம்பி இருந்ததால் 3 பேரும் நீரில் மூழ்கி விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அங்கிருந்த பொதுமக்கள், ஏரிக்குள் இறங்கி உஸ்மானை மட்டும் மீட்டனர். ஆனால் அதற்குள் அவர் நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்துவிட்டார்.

உடல்கள் மீட்பு

இதுபற்றி தகவல் அறிந்து வந்த பூந்தமல்லி தீயணைப்பு நிலைய வீரர்கள், ஏரியில் மூழ்கிய அப்சனா மற்றும் சுகில் இருவரது உடலையும் வலை மற்றும் ரப்பர் படகு மூலம் தீவிரமாக தேடி வந்தனர். நீண்டநேர தேடுதலுக்கு பிறகு இருவரது உடல்களையும் மீட்டனர்.

இதுகுறித்து குன்றத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பலியான 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து மேலும் விசாரித்து வருகின்றனர்.

தற்கொலையா?

போலீசாரின் விசாரணையில் உஸ்மான், தனது 2 பிள்ளைகளோடு உறவினரின் மகனையும் அழைத்து வந்துள்ளார். ஆனால் அவரை மட்டும் செம்பரம்பாக்கம் ஏரியின் மேலே நிறுத்திவிட்டு, தனது மகள், மகனுடன் உஸ்மான் ஏரிக்குள் இறங்கி உள்ளார்.

எனவே எதிர்பாராதவிதமாக ஏரிக்குள் அப்சனா தவறி விழுந்து, அவரை காப்பாற்ற அடுத்தடுத்து சுகில், உஸ்மான் ஆகியோரும் ஏரிக்குள் குதித்து நீரில் மூழ்கி இறந்தனரா? அல்லது திட்டமிட்டு உஸ்மானே தனது மகள், மகனை ஏரிக்குள் தள்ளிவிட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

செம்பரம்பாக்கம் ஏரியில் மூழ்கி ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story