துபாயில் இருந்து மாத்திரைகளாக மாற்றி கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் ரூ.13 லட்சம் தங்கம் சிக்கியது


துபாயில் இருந்து மாத்திரைகளாக மாற்றி கடத்தல்: சென்னை விமானநிலையத்தில் ரூ.13 லட்சம் தங்கம் சிக்கியது
x
தினத்தந்தி 18 March 2021 6:28 AM GMT (Updated: 18 March 2021 6:28 AM GMT)

துபாயில் இருந்து ரூ.13 லட்சம் தங்கத்தை மாத்திரைகளாக மாற்றி விழுங்கி கடத்தி வந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின் பேரில், சுங்க இலாகா அதிகாரிகள் துபாய் விமானத்தில் வந்த பயணிகளை கண்காணித்தனர். அப்போது ராமநாதபுரத்தை சேர்ந்த முகமது ரியாஸ் (வயது 39) என்பவரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில், ரூ.7 லட்சம் மதிப்புள்ள விலையுர்ந்த செல்போன்கள், டிஜிட்டல் வாட்சுகள், லேப்டாப்கள் இருந்தன. பின்னர் ராஜா முகமதுவை தனியறைக்கு அழைத்து சென்று சோதனை செய்தனர்.

அப்போது அவர் வயிறு வலிப்பதாக தெரிவித்ததையடுத்து, சோதித்த போது தங்கத்தை மாத்திரைகளாக மாற்றி விழுங்கி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், டாக்டர்கள் உதவியுடன் வயிற்றில் இருந்து 34 தங்க மாத்திரைகளை வெளியே எடுத்தனர். இதையடுத்து, ரூ.13 லட்சம் மதிப்புள்ள 280 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் கைப்பற்றினார்கள். ஆக முகமது ரியாசிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள தங்கம், செல்போன்கள், வாட்சுகள், லேப்டாப்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக முகமது ரியாசை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story