ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு


ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருட்டு
x
தினத்தந்தி 2 April 2021 1:02 AM GMT (Updated: 2 April 2021 1:02 AM GMT)

ஸ்ரீபெரும்புதூரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை- பணம் திருடப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர், 

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் எம்.ஜி.ஆர். நகர் ராமானுஜர் தெருவை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 62). இவரது மனைவி துரைராணி (56). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. வெளியூர்களில் வசித்து வருகின்றனர்.

தற்போது மூர்த்தி, துரைராணி மட்டும் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பூந்தமல்லி அருகே உள்ள தனது மகள் வீட்டுக்கு மூர்த்தி, துரைராணி இருவரும் சென்று விட்டு இரவு வீடு திரும்பினர். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.

நகை- பணம் திருட்டு

இதை கண்டு அதிர்ச்சி அடைந்து உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.53 ஆயிரம், 4 பவுன் நகை திருடப்பட்டிருப்பது தெரியவந்தது.

இது குறித்து மூர்த்தி ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டின் அருகில் உள்ள மற்றொரு வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி சம்பவம் நடந்திருப்பதும் தெரியவந்தது. அந்த தெருவில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை போலீசார் கைபற்றி விசாரணை நடத்தினர்.

15 முதல் 20 வயது வரை

அதில் 3 வாலிபர்கள் முக கவசம் அணிந்து வந்து கொள்ளையடிக்கும் காட்சிகள் பதிவாகி இருந்தது. அதில் ஒருவர் சாலையில் நோட்டமிட்டு கொண்டிருப்பதும், 2 பேர் கதவை கடப்பாரையால் உடைத்து உள்ளே சென்று விட்டு வெளியே வருவதும் பதிவாகி இருந்தது.

கொள்ளையர்களுக்கு 15 முதல் 20 வயது வரை இருக்கும் என்று தெரிகிறது. இந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story