மோட்டாரை திருடியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி


மோட்டாரை திருடியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 April 2021 12:47 AM GMT (Updated: 19 April 2021 12:47 AM GMT)

சென்னை கொடுங்கையூர், மோட்டாரை திருடியபோது மின்சாரம் தாக்கி வாலிபர் பலியானார்.

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர், கண்ணதாசன் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ஹேம்குமார். இவர், அதே பகுதியில் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் மாலை கட்டுமான பணி முடிந்து அனைவரும் சென்றுவிட்டனர். இரவு நேரத்தில் அங்கு வந்த காவலாளி, மின்மோட்டார் அருகே வாலிபர் ஒருவர் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுபற்றி அறிந்த ஹேம்குமார், கொடுங்கையூர் போலீசில் புகார் செய்தார். சம்பவ இடத்துக்கு வந்த போலீசார், வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுபற்றி போலீசார் நடத்திய விசாரணையில் பலியானவர், மாதவரம் பால்பண்ணை மூலச்சத்திரம் அறிஞர் அண்ணா நகரைச் சேர்ந்த வேலாயுதம் (வயது 22) என்பது தெரிந்தது. இவர், கட்டுமான பணி நடைபெறும் பகுதிகளில் உள்ள மின்மோட்டார், இரும்பு கம்பிகளை திருடி வந்துள்ளார். இவர் மீது பழைய வண்ணாரப்பேட்டை, கொருக்குப்பேட்டை உள்ளிட்ட போலீஸ் நிலையங்களில் வழக்கு இருப்பதும் தெரிந்தது. இவர், ஹேம்குமார் வீடு கட்டி வரும் பகுதியில் இருந்த மின் மோட்டாரை திருடும்போது மின்சாரம் தாக்கி இறந்தது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

Next Story