சென்னை விமான நிலையத்தில் ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.44½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 22 April 2021 12:04 AM GMT (Updated: 22 April 2021 12:04 AM GMT)

துபாயில் இருந்து சென்னை வந்த விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், இது தொடர்பாக பெங்களூருவைச் சேர்ந்த பெண்ணை கைது செய்தனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் பெரும் அளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக வந்த தகவலின்பேரில் விமான நிலைய சுங்க இலாகா கமிஷனர் ராஜன் சவுத்ரி தலைமையிலான சுங்க இலாகா அதிகாரிகள், அந்த விமானத்தில் வந்த பயணிகளை தீவிரமாக கண்காணித்தனர்.

அப்போது பெங்களூருவைச் சேர்ந்த வெலண்டினா மேரி (வயது 27) என்ற இளம்பெண்ணை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர்.

ரூ.44½ லட்சம் தங்கம்

ஆனால் அதில் எதுவும் இல்லாததால் அவரை தனியறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர்.

அவரிடம் இருந்து ரூ.44 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 930 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வெலண்டினா மேரியை கைது செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரிடம் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story