இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிர் பிரிந்தது


இறப்பிலும் இணை பிரியாத தம்பதி: மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவர் உயிர் பிரிந்தது
x
தினத்தந்தி 4 May 2021 6:28 AM IST (Updated: 4 May 2021 6:28 AM IST)
t-max-icont-min-icon

மனைவி இறந்த அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் திருவொற்றியூர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

திருவொற்றியூர், 

சென்னை திருவொற்றியூர் கலைஞர் நகர் 7-வது தெருவைச் சேர்ந்தவர் தங்கப்பன் (வயது 86). தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர். இவருடைய மனைவி விசாலாட்சி (76). இவர்களுக்கு 3 மகன்கள். அனைவருக்கும் திருமணமாகி தனியாக வசித்து வருகின்றனர்.

கணவன்-மனைவி இருவரும் ஒருவர் மீது ஒருவர் அதிக அன்பு கொண்டு இருந்தனர். விசாலாட்சி, கடந்த சில தினங்களாக உடல் நலம் சரியில்லாமல் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று விசாலாட்சி பரிதாபமாக உயிரிழந்தார்.

அதிர்ச்சியில் கணவர் உயிரிழந்தார்

மனைவி இறந்த தகவல் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த தங்கப்பன், திடீரென மயங்கி விழுந்தார். உடனே அவருடைய மகன்கள், தந்தையை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், தங்கப்பன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.

மனைவி இறந்த தகவல் கேட்ட அதிர்ச்சியில் கணவரும் உயிரிழந்த சம்பவம் அவர்களது குடும்பத்தினர், உறவினர்கள் மட்டுமின்றி அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏறபடுத்தியது. பின்னர் இருவரது உடலும் ஒரே இடத்தில் தகனம் செய்யப்பட்டது. மரணத்திலும் இருவரும் இணை பிரியாத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
1 More update

Next Story