நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 16-ந்தேதிக்குள் முடிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரி சிவதாஸ்மீனா தகவல்


நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 16-ந்தேதிக்குள் முடிக்கப்படும் கண்காணிப்பு அதிகாரி சிவதாஸ்மீனா தகவல்
x
தினத்தந்தி 14 Jun 2021 11:19 AM GMT (Updated: 14 Jun 2021 11:19 AM GMT)

நாகை மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 16-ந்தேதிக்குள் முடிக்கப்படும் என கண்காணிப்பு அதிகாரி சிவதாஸ்மீனா தெரிவித்தார்.

திட்டச்சேரி,

நாகை மாவட்டத்தில் 575 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி நடந்து வருகிறது.இந்த தூர்வாரும் பணியை கண்காணிக்க மாவட்ட கண்காணிப்பு அதிகாரியாக சிவதாஸ்மீனா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று. திருமருகல் அருகே சியாத்தமங்கை பகுதியில் வாய்க்கால் தூர்வாரும் பணியை 2 கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆய்வு செய்தார். அப்போது வாய்க்கால்கள் சரியான முறையில் தூர்வாரினால் தான் தண்ணீர் கடைமடை வரை செல்லும்.எனவே வாய்க்காலை முறையாக தூர்வார வேண்டும் என உத்தரவிட்டார்.

இதன்பின்னர் கண்காணிப்பு அதிகாரி சிவதாஸ் மீனா நிருபர்களிடம் கூறியதாவது:- டெல்டா மாவட்ட பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதற்காக தூர்வாரும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளது. தூர்வாரும் பணிகள் விரைவாகவும், தரமானதாகவும் இருக்க வேண்டும்.

16-ந்தேதிக்குள் முடிக்கப்படும்

தூர்வாரும் பணியில் தரம் இல்லை என்றால் மீண்டும் தூர்வார வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும்.நாகை மாவட்டத்தில் 575 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரும் பணி எடுக்கப்பட்டு இதுவரை 399 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணி நிறைவு பெற்றுள்ளது.இது 69 சதவீத பணி நிறைவு பெற்றுள்ளது.மீதமுள்ள பணிகள் வருகிற 16-ந் தேதிக்குள் (புதன்கிழமை) செய்து முடிக்கப்படும்.. தூர்வாரும் பணியில் முறைகேடு நடைபெறாமல் இருக்க பொதுப்பணித்துறை, விவசாயிகள் என 5 பேர் கொண்ட விவசாய குழு அமைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது கலெக்டர் பிரவீன் நாயர், தஞ்சாவூர் காவிரி வடிநில கோட்ட செயற்பொறியாளர் சொர்ணகுமார், வெண்ணாறு செயற்பொறியாளர் முருகவேல், உதவி செயற்பொறியாளர் லதாமகேஸ்வரி, உதவி பொறியாளர்கள் செல்வகுமார், கோகுல்ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Next Story