தமிழகத்தில் 4,481 பேருக்கு கொரோனா: ஆஸ்பத்திரிகளில் 72 ஆயிரம் படுக்கைகள் காலி


தமிழகத்தில் 4,481 பேருக்கு கொரோனா: ஆஸ்பத்திரிகளில் 72 ஆயிரம் படுக்கைகள் காலி
x
தினத்தந்தி 2 July 2021 1:24 PM GMT (Updated: 2 July 2021 1:24 PM GMT)

தமிழகத்தில் 4,481 பேருக்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆஸ்பத்திரிகளில் 72 ஆயிரத்து 467 படுக்கைகள் காலியாக உள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 61 ஆயிரத்து 973 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 2,546 ஆண்கள், 1,935 பெண்கள் என மொத்தம் 4 ஆயிரத்து 481 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த பட்டியலில் 12 வயதுக்கு உட்பட்ட 219 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 648 முதியவர்களும் இடம்பெற்று உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 498 பேரும், ஈரோட்டில் 411 பேரும், சேலத்தில் 279 பேரும், சென்னையில் 249 பேரும், திருப்பூரில் 256 பேரும், குறைந்தபட்சமாக ராமநாதபுரம் 19 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

102 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை 3 கோடியே 21 லட்சத்து 58 ஆயிரத்து 926 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது. அதில் 14 லட்சத்து 52 ஆயிரத்து 56 ஆண்களும், 10 லட்சத்து 32 ஆயிரத்து 83 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் உள்பட 24 லட்சத்து 84 ஆயிரத்து 177 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளன. அதில் 12 வயதுக்கு உட்பட்ட 90 ஆயிரத்து 31 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 3 லட்சத்து 58 ஆயிரத்து 65 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.

கொரோனாவுக்கு அரசு ஆஸ்பத்திரியில் 78 பேரும், தனியார் ஆஸ்பத்திரியில் 24 பேரும் என 102 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்து உள்ளனர். அந்தவகையில் தமிழகத்தில் அதிகபட்சமாக தஞ்சாவூரில் 23 பேரும், கோவையில் 10 பேரும், வேலூரில் 7 பேரும், திருப்பூரில் 6 பேரும் என நேற்று மட்டும் 25 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்துள்ளது.

உயிரிழந்தவர்களில் 17 பேர் இணை நோய் அல்லாதவர்கள் ஆவர். அந்தவகையில் தமிழகத்தில் இதுவரை 32 ஆயிரத்து 721 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்து உள்ளனர்.

72,467 படுக்கைகள் காலி

தமிழகத்தில் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெறுபவர்களில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகளில் 8 ஆயிரத்து 153 பேரும், ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகளில் 4 ஆயிரத்து 361 பேரும், ஐ.சி.யு படுக்கைகளில் 3 ஆயிரத்து 666 பேரும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.அந்தவகையில் நேற்று 39 ஆயிரத்து 516 ஆக்சிஜன் படுக்கைகள், 26 ஆயிரத்து 825 ஆக்சிஜன் வசதி அல்லாத சாதாரண படுக்கைகள், 6 ஆயிரத்து 126 ஐ.சி.யு படுக்கைகள் என மொத்தம் 72 ஆயிரத்து 467 படுக்கைகள் ஆஸ்பத்திரிகளில் காலியாக உள்ளன. அதேபோல், கொரோனா பராமரிப்பு மையங்களில் 5 ஆயிரத்து 891 பேர் சிகிச்சையில் உள்ளனர். அந்தவகையில் 58 ஆயிரத்து 804 படுக்கைகள் காலியாக இருக்கின்றன.

5,044 பேர் ‘டிஸ்சார்ஜ்’

கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 5,044 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டு உள்ளனர். இதில் அதிகபட்சமாக கோவையில் 922 பேரும், ஈரோட்டில் 310 பேரும், திருப்பூரில் 342 பேரும், சேலத்தில் 492 பேரும் அடங்குவர்.

இதுவரையில் 24 லட்சத்து 13 ஆயிரத்து 930 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 37 ஆயிரத்து 526 பேர் உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story