கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட குழந்தைகள் வளர்ச்சி மையங்கள் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x
தினத்தந்தி 29 July 2021 4:15 AM GMT (Updated: 29 July 2021 4:15 AM GMT)

கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குழந்தைகள் வளர்ச்சி மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மாநகராட்சியின் திரு.வி.க.நகர் மண்டலம் கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கோபாலபுரத்தில் அமைந்துள்ள சென்னை நடுநிலைப்பள்ளியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் ரூ.17.37 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடம்,

திரு.வி.க.நகர் பிரதான சாலையில் ரூ.28.28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி மையங்கள், பல்லவன் சாலையில் ரூ.19.41 லட்சம் மதிப்பீட்டில் நீத்தார் நினைவுக்கூடம் என மொத்தம் ரூ.65 லட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை நேற்று திறந்து வைத்தார்.

இலவச கம்ப்யூட்டர் பயிற்சி

அதனைத்தொடர்ந்து, டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளியில் அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் 360 மகளிருக்கு தையல் எந்திரம் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கினார்.

கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அனிதா அச்சீவர்ஸ் அகாடமி சார்பில் 223 மாணவர்களுக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி பெறுவதற்கான ஆணைகளையும், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு புத்தகப்பைகள், நோட்டு புத்தகங்கள், உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் மற்றும் மடிக்கணினிகள், பொதுமக்களுக்கு 4 சக்கர தள்ளு வண்டிகள், மீன்பாடி வண்டிகள், மாவு அரவை எந்திரங்கள், 3 சக்கர மோட்டார் வாகனங்கள், மருத்துவம் மற்றும் திருமண உதவிகள் ஆகிய நலத்திட்ட உதவிகளையும் வழங்கி, அங்கு அமைக்கப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி மையத்தையும் பார்வையிட்டார்.

நீரேற்று நிலையம்

மேலும், பூம்புகார் நகர், 1-வது பிரதான சாலையில் அரசு மகளிர் கல்லூரி அமையவிருக்கும் இடத்தையும், வீனஸ் நகர் 5-வது குறுக்கு தெருவில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் பிற்படுத்தப்பட்டோர் ஆண்கள் விடுதிக் கட்டிடப் பணியையும், கணேஷ் நகரில் குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தால் நிறுவப்படவுள்ள நீரேற்று நிலையத்தையும், அப்பகுதியில் துணை மின்நிலையம் அமைக்கப்படவுள்ள இடத்தையும் முதல்-அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, எம்.எல்.ஏ. தாயகம் கவி, பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி, இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ. குமரகுருபரன், சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ. விஜயராணி, மாநகராட்சி துணை ஆணையர் (சுகாதாரம்) மனீஷ், துணை ஆணையர் (கல்வி) டி.சினேகா, மத்திய வட்டார துணை ஆணையர் சரண்யா அரி, அனிதா அச்சீவர்ஸ் அகாடமி முதன்மை செயல் அலுவலர் நரேந்திரன், முதன்மை இயக்க அலுவலர் ஹெலன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story