மீன் மார்க்கெட்களில் அதிரடி சோதனை: 275 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்


மீன் மார்க்கெட்களில் அதிரடி சோதனை: 275 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 5 Sep 2021 4:49 AM GMT (Updated: 5 Sep 2021 4:49 AM GMT)

மீன் மார்க்கெட்களில் அதிரடி சோதனை: 275 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் அதிகாரிகள் நடவடிக்கை.

சென்னை,

சென்னையில் உள்ள மீன் மார்க்கெட்களில் தரமற்ற மீன்களும் விற்பனை செய்யப்படுவதாக தமிழக அரசின் உணவு பாதுகாப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி சதீஷ்குமார் தலைமையில் சதாசிவம், ராஜா, மணிமுருகன் உள்ளடங்கிய அதிகாரிகள் குழுவினர் சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட் பகுதிக்கு வந்தனர். அவர்களுடன் மீன்வளத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.

அங்குள்ள மீன் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் மற்றும் கிடங்குகளில் ஐஸ் பாக்ஸ்களில் பதப்படுத்தப்பட்ட மீன்கள் ஆகியவற்றை அதிகாரிகள் குழுவினர் சோதனையிட்டனர். இதில் 200 கிலோ மீன்கள் கெட்டுப்போன நிலையில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மீன்கள் மீது பிளீச்சிங் பவுடர் தூவி அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டது. பகுப்பாய்வு கூடத்தில் ஆய்வு செய்வதற்காக மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன.

அதேபோல காசிமேடு மீன்பிடி துறைமுகத்திலும் அதிகாரிகள் குழு நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன்களில் 75 கிலோ கெட்டுப்போன மீன்கள் அப்புறப்படுத்தப்பட்டது. அதேபோல நொச்சிக்குப்பம் மீன் மார்க்கெட்டிலும் சோதனை நடந்தது.

Next Story