சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sep 2021 12:07 AM GMT (Updated: 23 Sep 2021 12:07 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் ரூ.28 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள 664 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர். அப்போது சென்னையைச் சோ்ந்த பெண் பயணி, அவசரமாக வெளியே செல்ல முயன்றாா். இதனால் சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பெண்ணை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் அவரிடம் இருந்த உடைமைகளை சோதனை செய்தனர். அதில் 4 தங்க வளையல்கள் இருந்தன. மேலும் அந்த பெண்ணை, தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனா். அதில் அவர், உள்ளாடைக்குள் தங்கத்தை மறைத்து வைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அந்த பெண்ணிடம் இருந்து ரூ.13 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள 307 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்த சுங்க இலாகா அதிகாரிகள், அந்த பெண்ணை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

சார்ஜா விமானம்

அதேபோல் சார்ஜாவில் இருந்து விமானத்தில் வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர். அவரிடம் இருந்த சூட்கேசை சோதனை செய்தபோது அதில் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்கள் மற்றும் ரூ.22 ஆயிரம் மதிப்புள்ள சிகரெட்டுகள் இருந்தது.

பின்னர் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனர். அதில் அவர் உள்ளாடைக்குள் மறைத்து கடத்தி வந்த ரூ.15 லட்சத்து 12 ஆயிரம் மதிப்புள்ள 357 கிராம் தங்கத்தையும், சிகரெட் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Next Story