துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.65½ லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து கடத்தல்: சென்னை விமான நிலையத்தில் ரூ.65½ லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 27 Sep 2021 11:45 AM GMT (Updated: 27 Sep 2021 11:45 AM GMT)

சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து கடத்தி வந்த ரூ.65 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 383 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சோ்ந்த பயணியை சுங்க இலாகா அதிகாரிகள் சந்தேகத்தின்பேரில் நிறுத்தி விசாரித்தனர்.

அதிகாரிகளிடம் அவர் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவரது உடமைகளை சோதனை செய்தனர். ஆனால் அதில் எதுவும் இல்லை. இதையடுத்து அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனா். அப்போது அவர், உள்ளாடைக்குள் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.39 லட்சத்து 95 ஆயிரம் மதிப்புள்ள 864 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

ரூ.65½ லட்சம் தங்கம்

அதேபோல் மற்றொரு துபாய் விமானத்தில் வந்த திருச்சியை சேர்ந்த பயணியிடம் இருந்து ரூ.18 லட்சத்து 48 ஆயிரம் மதிப்புள்ள 349 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களையும், துபாயில் இருந்து வந்த வேறொரு விமானத்தில் கேட்பாரற்று கிடந்த ரூ.7 லட்சம் மதிப்புள்ள 170 கிராம் தங்கத்தையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலையத்தில் ஒரே நாளில் ரூ.65 லட்சத்து 43 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 383 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சென்னையை சேர்ந்த வாலிபரை கைது செய்த அதிகாரிகள், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story