துபாயில் இருந்து சென்னைக்கு சார்ஜரில் மறைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்


துபாயில் இருந்து சென்னைக்கு சார்ஜரில் மறைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 29 Sep 2021 9:14 AM GMT (Updated: 29 Sep 2021 9:14 AM GMT)

துபாயில் இருந்து சென்னை விமான நிலையத்துக்கு லேப்டாப் சார்ஜரில் மறைத்து வைத்து கடத்தி வந்த ரூ.58 லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்திற்கு துபாயில் இருந்து வரும் சிறப்பு விமானத்தில் பெருமளவில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்க இலாகா அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த விமானத்தில் வந்து இறங்கிய பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது சென்னையை சோ்ந்த 2 பயணிகள் சுங்க இலாகா அதிகாரிகளின் கவனத்தை மீறி நைசாக வெளியே செல்ல முயன்றனா். அப்போது அவர்கள் மீது சந்தேகம் கொண்ட சுங்க இலாகா அதிகாரிகள் 2 பயணிகளை தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.

ரூ.58 லட்சம் தங்கம்

அதில், முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் பழைய லேப்டாப் சார்ஜர்கள், 15 ஐபோன்கள் இருந்தன. இதையடுத்து கொண்டு வந்த லேப்டாப் சார்ஜர்களை பிரித்து பார்த்த போது, அதில் தங்கத்தை மறைத்து வைத்து இருப்பதை கண்டுபிடித்தனா். இதையடுத்து அதில் இருந்த ரூ.58 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 380 கிராம் தங்கத்துடன் லேப்டாப்கள், ஐபோன்கள் ஆகியவற்றை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 2 பேரையும் கைது செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Next Story