வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு


வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
x
தினத்தந்தி 1 Oct 2021 8:39 AM GMT (Updated: 1 Oct 2021 8:39 AM GMT)

வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு மோட்டார் சைக்கிளில் வந்த கொள்ளையன், காரில் தப்பிச்சென்றான்.

தாம்பரம்,

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் லட்சுமி நகரைச் சேர்ந்தவர் கருப்பையா (வயது 62). இவர், சொந்தமாக கார் வைத்து ஓட்டி வருகிறார். இவர், வீட்டை பூட்டிவிட்டு மனைவியுடன், தனது சகோதரர் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக ராமநாதபுரம் சென்றுவிட்டார். நேற்று காலை இவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்ட அக்கம் பக்கத்தினர் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அதில் கருப்பையா வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர், பீரோவில் இருந்த 6 பவுன் நகை, ரூ.50 ஆயிரம், குத்துவிளக்குகள் மற்றும் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த கார் ஆகியவற்றை திருடிச்சென்றது தெரிந்தது. வீட்டின் படுக்கை அறையில் உள்ள கட்டிலுக்கு அடியில் வைத்திருந்த 22 பவுன் நகை, திருடன் கண்ணில் படாததால் அவை தப்பியது. மேலும் மோட்டார்சைக்கிளில் வந்த கொள்ளையன், மோட்டார் சைக்கிளை அந்த பகுதியில் உள்ள கோவில் அருகில் நிறுத்தி விட்டு கருப்பையா வீட்டில் நகை, பணம் கொள்ளையடித்துவிட்டு அவரது காரையும் திருடி அதில் தப்பிச்சென்றது தெரியவந்தது. இதுபற்றி பீர்க்கன்காரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Next Story