தடுப்பூசி போடாமல் இருக்க சாமியாடி நாடகமாடிய பெண்கள்


தடுப்பூசி போடாமல் இருக்க சாமியாடி நாடகமாடிய பெண்கள்
x
தினத்தந்தி 9 Oct 2021 9:47 PM GMT (Updated: 9 Oct 2021 9:47 PM GMT)

யாதகிரி அருகே கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்க அருள் வந்தது சாமியாடியது போல் நடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

யாதகிரி:

கொரோனா தடுப்பூசி

  கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து பொதுமக்களை தப்பிக்க வைக்கும் நோக்கில், தடுப்பூசி போடும் பணியை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். ஆனால் கிராமங்களில் தடுப்பூசி போட்டால் உயிரிழந்து விடுவோம் என்ற பயம் நிலவி வருகிறது. இதனால் கிராம மக்கள் தடுப்பூசி போட்டு கொள்ள தயக்கம் காட்டி வருகின்றனர்.

  இந்த நிலையில் கொரோனா தடுப்பூசி போடாமல் இருக்க பெண்கள் சாமியாடிய சம்பவம் கர்நாடகத்தில் நடந்து உள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-

சாமியாடி நடித்து...

  கர்நாடக மாநிலம் யாதகிரி மாவட்டம் வடகேரா தாலுகாவில் உள்ள ஹீலகல் கிராமத்தில் வசித்து வரும் மக்களுக்கு தடுப்பூசி போட நேற்று சுகாதாரத்துறையினர் சென்றனர். ஆனால் தடுப்பூசி போட மறுத்த கிராம மக்கள், தடுப்பூசிக்கு எதிராக பேசினர். அப்போது அவர்களை சமாதானப்படுத்திய சுகாதாரத்துறையினர், தடுப்பூசி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்த சந்தர்ப்பத்தில் 3 ஆண்கள், 2 பெண்கள் திடீரென தங்களுக்கு இறை அருள் வந்து சாமியாடி நாடகமாடினர்.

  மேலும் தடுப்பூசி போடவும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடு சுகாதாரத்துறையினரை அவர்கள் ஒருமையில் பேசியதாகவும் தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த சுகாதாரத்துறையினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதுதொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Next Story