காஞ்சீபுரம், செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு


காஞ்சீபுரம், செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு
x
தினத்தந்தி 21 Oct 2021 11:05 PM GMT (Updated: 21 Oct 2021 11:05 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் காவலர் வீரவணக்க நாள் நடைபெற்றது. மாவட்ட எஸ்.பி டாக்டர் எம்.சுதாகர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

காஞ்சீபுரம், செங்கல்பட்டில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.

காவலர் வீரவணக்க நாள்

1959-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21-ந்தேதி லடாக் பகுதியில் ஹாட்பிரிங் என்ற இடத்தில் சீன ராணுவத்தினர் மறைந்திருந்து மேற்கொண்ட திடீர் தாக்குதலில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர்.

கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் அன்று வீர மரணமடைந்த காவலர்களின் தியாகத்தை நினைவு படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந்தேதி காவலர் வீரவணக்க நாள் நாடு முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த ஆண்டு மட்டும் நாடு முழுவதும் பல்வேறு சம்பவங்களில் 377 காவலர்கள் உயிர் தியாகம் செய்துள்ளனர் இவர்களின் தியாகத்தை நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் வகையில் நேற்று காஞ்சீபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் ஆயுதப்படை மைதானத்தில் 63 குண்டுகள் முழங்க காஞ்சீபுரம் சரக டி.ஐ.ஜி. எம்.சத்யபிரியா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் உள்ளிட்ட காவல்துறை அலுவலர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் ஆயுதபடை கவாத்து மைதானத்தில் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் விஜயகுமார் தலைமையில் காவலர் வீர வணக்க நாள் உறுதிமொழி ஏற்று துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.


Next Story