அபுதாபியில் இருந்து சென்னைக்கு சூட்கேஸ் கைப்பிடியில் மறைத்து கடத்திய 2 கிலோ தங்கம் பறிமுதல்


அபுதாபியில் இருந்து சென்னைக்கு சூட்கேஸ் கைப்பிடியில் மறைத்து கடத்திய 2 கிலோ தங்கம் பறிமுதல்
x
தினத்தந்தி 8 Nov 2021 12:26 AM GMT (Updated: 8 Nov 2021 12:26 AM GMT)

அபுதாபியில் இருந்து சென்னைக்கு சூட்கேசின் கைப்பிடியில் மறைத்து கடத்தி வந்த ரூ.90 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 6 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு அபுதாபியில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர்.

அந்த விமானத்தில் வந்த 31 வயது மதிக்கத்தக்க வாலிபர் மீது சந்தேகம் அடைந்த சுங்க இலாகா அதிகாரிகள், அவரை நிறுத்தி விசாரித்தனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் அவரது உடைமைகளை சோதனை செய்தனர். அதில் எதுவும் இல்லாததால் அவரை தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனை செய்தனா். அதிலும் எதுவும் இல்லை.

கைப்பிடியில் தங்கம்

ஆனால் அவரது சூட்கேஸ் மீது சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தீவிரமாக சோதனை செய்தனர். அதில் சூட்கேசின் கைப்பிடியில் தங்கத்தை கம்பியாக மாற்றி, மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனா்.

அவரிடம் இருந்து ரூ.90 லட்சத்து 17 ஆயிரம் மதிப்புள்ள 2 கிலோ 6 கிராம் தங்கத்தை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வாலிபரை கைது செய்தனர். மேலும் அவரிடம், அந்த தங்கம் யாருக்காக கடத்தி வரப்பட்டது? என சுங்க இலாகா அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Next Story