காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாமூல் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படைகள்


காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாமூல் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படைகள்
x
தினத்தந்தி 22 Nov 2021 3:05 PM GMT (Updated: 22 Nov 2021 3:05 PM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் மாமூல் கேட்டு அட்டகாசம் செய்த ரவுடிகளை பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

ரவுடிகளின் அட்டகாசம்

காஞ்சீபுரத்தை சேர்ந்த பிரபல ரவுடியான ஸ்ரீதர் மறைவுக்கு பிறகு அவர் போலவே கோலோச்ச வேண்டும் என தணிகா மற்றும் தினேஷ்க்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இவர்களுக்குள் மோதல் ஏற்பட்டு கொலைகளும், கொலை முயற்சிகளும் அரங்கேறி வருகின்றன.

இந்த நிலையில் ஸ்ரீதரின் ஆதரவாளர்கள் சாலை தெரு பகுதியில் சூப்பர் மார்க்கெட் நடத்தி வரும் ஸ்ரீராமிடம் லட்சக்கணக்கில் மாமூல் கேட்டு மிரட்டி அவரது கடையை சூறையாடி அட்டகாசம் செய்தனர். அதனைதொடர்ந்து, முன்விரோதம் காரணமாக ஸ்ரீதரின் கூட்டாளியான ஏட்டு பிரபுவின் 2 மகன்கள், சராஜமன்னார் மற்றும் வெங்கடேசன் ஆகியோரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி சென்றனர்.

தனிப்படை அமைப்பு

இதுகுறித்து சிவகாஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் குற்றவாளிகளை விரைந்து பிடிக்க காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம்.சுதாகர் உத்தரவின்படி இன்ஸ்பெக்டர்கள் திருநாவுக்கரசு, சுந்தர்ராஜ், ராஜகோபால், வெங்கடேசன், ஆகியோர் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குற்றவாளிகளை பிடிக்க போலீசார் விரைந்துள்ளனர்.

விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story