காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்: போலீஸ் சூப்பிரண்டு


காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார்: போலீஸ் சூப்பிரண்டு
x
தினத்தந்தி 2 Dec 2021 11:52 AM GMT (Updated: 2 Dec 2021 11:52 AM GMT)

காஞ்சீபுரம் மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் தெரிவித்தார்.

காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக ரவுடிகள் மூலம் மாமூல் கேட்டு சூப்பர் மார்க்கெட் சூறையாடல், கொலை முயற்சி சம்பவங்கள், நள்ளிரவில் பெட்ரோல் பங்க்கில் கொள்ளை முயற்சி உள்ளிட்ட சம்பவங்கள் அரங்கேறின. அமைதியாக காணப்பட்ட காஞ்சீபுரம் நகரம் மீண்டும் ரவுடிகளின் அட்டகாசத்தினால் மக்கள் அச்சத்துடன் உள்ளனர்.இந்நிலையில் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் எம். சுதாகர் நேற்று நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காஞ்சீபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும். குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.சட்டம் ஒழுங்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் ரவுடிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு வருகிறது. ரவுடிகள் யாராக இருந்தாலும் அவர்கள் கைது செய்யப்பட்டு கடுமையான தண்டனை விதிக்கப்படும் விரைவில் அவர்கள் பிடிபடுவார்கள்.சட்டத்திற்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.கந்து வட்டியால் பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக போலீஸ் நிலையத்தில் தகவல் தெரிவித்தால், அவர்கள் மீது உரிய விசாரணை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.காஞ்சீபுரம் மாவட்டத்தில் 14 போலீஸ் நிலையங்கள் உள்ளன, இரவு பணியின் போது ரோந்து செல்லும் போலீசார் அவர்களின் பாதுகாப்பு கருதி, தமிழக டி.ஜி.பி. சைலேந்திரபாபு அறிவுரையின்படி துப்பாக்கியுடன் சென்று வருகின்றனர்.மாவட்டத்தில் பொதுமக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும், பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஊறுவிளைவிக்க நினைக்கும் எவராயினும் அவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Next Story