சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம்-எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்


சென்னை விமான நிலையத்தில் ரூ.1 கோடி தங்கம்-எலக்ட்ரானிக் பொருட்கள் பறிமுதல்
x

சென்னை விமான நிலையத்தில் துபாய், சார்ஜாவில் இருந்து கடத்தி வந்த ரூ.1 கோடியே 13 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

மரத்தூளுக்குள் தங்கம்

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை சுங்க இலாகா அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்தனர். அப்போது 4 பேரை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி விசாரித்தனர். அதிகாரிகளிடம் அவர்கள் முன்னுக்குபின் முரணாக பேசியதால் அவர்களது உடைமைகளை சோதனை செய்தனர்.

அதில் மரத்தூள் கொண்ட அட்டை பெட்டிகள் இருந்தன. சந்தேகத்தின்பேரில் அவற்றை பிரித்து பார்த்தபோது, மரத்தூளுக்குள் தங்கத்தை மறைத்து கடத்தி வந்ததை கண்டுபிடித்தனர். அவரிடம் இருந்து ரூ.49 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 147 கிராம் தங்கத்தை கைப்பற்றினார்கள்.

மேலும் 4 பேரின் சூட்கேசில் இருந்து ரூ.42 லட்சத்து 4 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

ரூ.1 கோடி

அதேபோல் சார்ஜாவில் இருந்து சென்னைக்கு விமானத்தில் வந்த பயணியின் உடைமைகளை சோதனை செய்தனர். அதில் கேபிள் வயரில் மறைத்து கடத்தி வந்த ரூ.11 லட்சத்து 87 ஆயிரம் மதிப்புள்ள 275 கிராம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் ரூ.9 லட்சத்து 80 ஆயிரம் மதிப்புள்ள எலக்ட்ரானிக் பொருட்களையும் கைப்பற்றினார்கள்.

சென்னை விமான நிலையத்தில் 5 பேரிடம் இருந்து ரூ.1 கோடியே 13 லட்சத்து 21 ஆயிரம் மதிப்புள்ள 1 கிலோ 422 கிராம் தங்கம் மற்றும் எலக்ட்ரானிக், பொருட்களை சுங்க இலாகா அதிகாரிகள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story