பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது: தமிழக அரசு நடவடிக்கை


பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் சென்னை கொண்டு வரப்பட்டது: தமிழக அரசு நடவடிக்கை
x
தினத்தந்தி 25 Jan 2022 9:50 AM GMT (Updated: 25 Jan 2022 9:50 AM GMT)

பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த மருத்துவ மாணவர் உடல் தமிழக அரசின் நடவடிக்கையால் சென்னை கொண்டுவரப்பட்டது.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

மருத்துவ மாணவர் சஷ்டிகுமார்

தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் இராசிங்கபுரம் நடுத்தெருவில் வசித்த பாலசேகரன் என்பவரின் மகன் சஷ்டிகுமார், பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள ஏ.எம்.ஏ. மருத்துவ கல்லூரியில் மருத்துவ பட்டப்படிப்பு பயில சென்றதாகவும், கடந்த 15-ந் தேதி காலை 8 மணி அளவில் அருவியில் குளிக்கச்சென்றபோது, சஷ்டிகுமார் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாகவும் தெரிவித்து, உயிரிழந்த அவரது உடலை சொந்த ஊருக்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்திடுமாறு, முன்னாள் துணை முதல்-அமைச்சரும், தற்போதைய போடிநாயக்கனூர் எம்.எல்.ஏ.வுமான ஓ.பன்னீர்செல்வம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

மேற்படி கோரிக்கையை மத்திய அரசின் வெளியுறவு துறையுடன் ஒருங்கிணைந்து நிறைவேற்றிட உரிய நடவடிக்கைகளை எடுத்திடுமாறு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானுக்கும், தி.மு.க. எம்.பி. தயாநிதி மாறனுக்கும் முதல்-அமைச்சர் அறிவுறுத்தியிருந்த நிலையில், உயிரிழந்த சஷ்டிகுமாரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர தேவையான அனைத்து சட்டப்பூர்வமான நடவடிக்கைகளும் தமிழ்நாடு அரசின் அயலக தமிழர் நல ஆணையரகத்தின் மூலம், மத்திய அரசின் வெளியுறவுத்துறை மற்றும் பிலிப்பைன்ஸ் நாட்டில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டது.

குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு

இதனைத்தொடர்ந்து, நேற்று அதிகாலை 2.15 மணி அளவில், சஷ்டிகுமாரின் உடல், பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து விமானத்தின் மூலம் சென்னை விமான நிலையம் கொண்டுவரப்பட்டு, அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேற்படி சஷ்டிகுமாரின் உடலை தமிழ்நாட்டிற்கு கொண்டுவர சிறப்பு நேர்வாக, தமிழ்நாடு அரசின் சார்பில் ரூ.4 லட்சம் செலவினம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், அவரது உடலை அவருடைய சொந்த ஊருக்கு கொண்டு செல்ல, தமிழ்நாடு அரசின் கட்டணமில்லா அமரர் ஊர்தி வாகன சேவையும் ஏற்பாடு செய்து தரப்பட்டது.

இந்நிலையில், இத்துயர சம்பவத்தில் உயிரிழந்த சஷ்டி குமாரை இழந்துவாடும், அவர்தம் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story