தர்மபுரி நகராட்சி கூட்டம் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு


தர்மபுரி நகராட்சி கூட்டம் சொத்து வரி உயர்வை கண்டித்து அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு
x
தினத்தந்தி 8 April 2022 11:25 PM IST (Updated: 8 April 2022 11:25 PM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பினர்.

தர்மபுரி:
தர்மபுரி நகராட்சி கூட்டத்தில் சொத்து வரி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அவர்கள் அலுவலகம் முன்பு கோஷங்கள் எழுப்பினர்.
நகராட்சி கூட்டம்
தர்மபுரி நகராட்சி அவசர கூட்டம் மன்ற கூடத்தில் நேற்று மாலை நடைபெற்றது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் லட்சுமி நாட்டான் மாது தலைமை தாங்கினார். நகராட்சி துணைத்தலைவர் நித்யா அன்பழகன், நகராட்சி பொறியாளர் ஜெயசீலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகராட்சி ஆணையாளர் சித்ரா சுகுமார் வரவேற்று பேசினார்.
தமிழக அரசால் அமைக்கப்பட்ட சொத்துவரி சீராய்வு செய்வதற்கான குழு பல்வேறு காரணிகளை ஆராய்ந்து தற்போது சொத்து வரி சீராய்வு செய்வது அவசியம் என அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி மண்டல அடிப்படையில் தர்மபுரி நகராட்சி பகுதியில் 600 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 25 சதவீதம் சொத்து வரி உயர்வு செய்யப்பட வேண்டும். 601 முதல் 1,200 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 50 சதவீதம் சொத்துவரியும், 1,201 முதல் 1,800 சதுர அடி பரப்பளவு உள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 75 சதவீதம் சொத்துவரியும் உயர்வு செய்யப்பட வேண்டும்.
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
இதேபோன்று 1,800 சதுர அடிக்கு அதிகமாக பரப்பளவுள்ள குடியிருப்பு கட்டிடங்களுக்கு 100 சதவீதம் சொத்துவரியும், வணிக பயன்பாட்டு கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 100 சதவீதம் சொத்துவரியும், தொழிற்சாலை பயன்பாட்டு கட்டிடம் மற்றும் சுயநிதி பள்ளி மற்றும் கல்லூரி கட்டிடங்களுக்கு தற்போது உள்ள சொத்து வரியில் 75 சதவீதம் சொத்துவரி உயர்வு செய்யப்பட வேண்டும் என்று கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது. 
இந்த தீர்மானத்திற்கு கவுன்சிலர்கள் ராஜாத்தி ரவி, தண்டபாணி, அம்பிகா, செல்வி, முன்னா, நாகராஜன் உள்ளிட்ட அனைத்து அ.தி.மு.க. கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் சொத்து வரி உயர்வை ரத்து செய்ய வேண்டும் என கூறிய அ.தி.மு.க. கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். பின்னர் அவர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு சொத்து வரி உயர்வை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.
1 More update

Next Story