பீகார்: கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து விபத்து - ஒருவர் பலி


பீகார்: கட்டுமான பணியின்போது பாலம் இடிந்து விபத்து - ஒருவர் பலி
x

இந்த விபத்தில் 30 தொழிலாளர்கள் வரை சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

பாட்னா,

பீகார் மாநிலம் சுபால் மாவட்டம், மரிச்சா பகுதியின் அருகே உள்ள கோசி ஆற்றின் மீது ரூ.984 கோடி செலவில் பாலம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த கட்டுமான பணிகளில் அப்பகுதியை சேர்ந்த ஏராளமான தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை பாலத்தின் இணைப்புப்பகுதி திடீரென இடிந்து விழுந்தது. இதில் பணியில் ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கினர். தொழிலாளர்களின் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு வந்து தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் மற்றும் போலீசார் தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் ஒரு தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் 30 தொழிலாளர்கள் வரை இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதனால் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

ஏற்கெனவே, பீகாரின் பாகல்பூரில் கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது சுபாலில் மீண்டும் பாலம் இடிந்து விழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story