இமாசலபிரதேசத்தில் வணிக வளாகத்தில் வெடிவிபத்து; ஒருவர் பலி


இமாசலபிரதேசத்தில் வணிக வளாகத்தில் வெடிவிபத்து; ஒருவர் பலி
x

இமாசலபிரதேசத்தில் வணிக வளாகத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் சிக்கி ஒருவர் பலியானார்.

சிம்லா,

இமாசலபிரதேச மாநிலத்தின் தலைநகர் சிம்லாவில் உள்ள மிடில் பஜார் பகுதியில் மிகப்பெரிய வணிக வளாகம் உள்ளது. நேற்று மாலை இந்த வணிக வளாகம் வழக்கம் போல் பரபரப்பாக இயங்கி கொண்டிருந்தது.

அப்போது வணிக வளாகத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பயங்கர வெடி விபத்து நேரிட்டது. அதை தொடர்ந்து ஓட்டலில் தீப்பற்றி எரிந்தது. இதனால் அங்கு பெரும் பரபரப்பும், பீதியும் உருவானது. ஓட்டலில் இருந்தவர்கள் அலறியடித்துக்கொண்டே வெளியே ஓட்டம் பிடித்தனர். இந்த சம்பவத்தால் வணிக வளாகம் முழுவதும் பதற்றம் தொற்றிக்கொண்டது. மக்கள் கூச்சலிட்டபடி அங்கும் இங்குமாக ஓடினர்.

இந்த வெடிவிபத்தில் ஓட்டலுக்கு அருகில் 6 கடைகள் பலத்த சேதமடைந்தன. இந்த கோர விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் 7 பேர் பலத்த காயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர்.

ஓட்டலில் இருந்த கியாஸ் சிலிண்டர் வெடித்து இந்த விபத்து நேரிட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்த சிலர் தெரிவித்தனர். எனினும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story