மேகவெடிப்பில் டெல்லி பெண்கள் 2 பேர் உயிரிழப்பு; நிதியுதவி அறிவித்த கெஜ்ரிவால்


மேகவெடிப்பில் டெல்லி பெண்கள் 2 பேர் உயிரிழப்பு; நிதியுதவி அறிவித்த கெஜ்ரிவால்
x

அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் உயிரிழந்த டெல்லியை சேர்ந்த 2 பெண்களின் குடும்ப உறுப்பினர்களை முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிதியுதவியும் அறிவித்து உள்ளார்.



ஜம்மு,



ஜம்மு மற்றும் காஷ்மீரில் அமர்நாத் புனித யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் குகை அருகே உள்ள பகுதியில் கடந்த வெள்ளி கிழமை மாலை திடீரென மேகவெடிப்பு ஏற்பட்டு, அப்பகுதியில் பெருமழை கொட்டியது. இந்த மேகவெடிப்பில் 16 பேர் உயிரிழந்து உள்ளனர். 45 பேர் காயமடைந்தனர்.

அவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். படுகாயமடைந்த நபர்கள் ஸ்ரீநகருக்கு கொண்டு செல்லப்பட்டனர். மீட்பு பணிகள் நடந்த நிலையில் அமர்யாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன.

அமர்நாத் குகை பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்ட பகுதியருகே, இந்தோ-திபெத்திய எல்லை போலீசார், தேசிய மற்றும் மாநில பேரிடர் பொறுப்பு படையினர் உள்ளிட்ட பல குழுக்கள் மீட்பு பணியில் ஈடுபட்டன.

பட்டான் மற்றும் ஷரிபாபாத் பகுதியை சேர்ந்த தலா இரு மோப்ப நாய் படைகளும் மீட்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டன. இதேபோன்று, காஷ்மீரின் சுகாதார சேவை இயக்ககம், ஒப்பந்த அடிப்படையிலான பணியாளர்கள் உள்பட அனைவரின் விடுமுறையையும் ரத்து செய்தது.

அதனுடன், அவர்களை உடனடியாக பணிக்கு வரும்படியும் உத்தரவிட்டு சுற்றறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் தத்ரி நகரில் குந்தி வனத்தின் மலைபிரதேச பகுதியில் கடந்த சனி கிழமை அதிகாலை 4 மணி அளவில் மீண்டுமொரு மேகவெடிப்பு ஏற்பட்டது. இதனால், அந்த பகுதியில் பெருமழை கொட்டியது.

இதில், நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சேற்றில் சில வாகனங்கள் சிக்கி கொண்டன. கார், ஜீப் உள்ளிட்டவற்றின் சக்கரங்கள் மண்ணில் புதையுண்டன. இதனை அடுத்து, வாகன போக்குவரத்தில் சிறிது நேரம் பாதிப்பு ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் கொண்டு வரப்பட்டு சாலை சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன்பின்னர் போக்குவரத்து சீர் செய்யப்பட்டு வாகனங்கள் இயங்கப்பட்டன. இதுவரை நடந்த மீட்பு பணியில் 16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளன.

அமர்நாத் புனித யாத்திரை மேகவெடிப்பு மற்றும் பெருமழை ஆகியவற்றால் தற்காலிக ரத்து செய்யப்பட்ட நிலையில், இன்று காலை மீண்டும் தொடங்கியுள்ளது. இதனால், பக்தர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

அமர்நாத் புனித யாத்திரைக்கு சென்ற பக்தர்களில் மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்த டெல்லியை சேர்ந்த 2 பெண்களின் குடும்ப உறுப்பினர்களை முதல்-மந்திரி கெஜ்ரிவால் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். அவர்களது புகைப்படங்களுக்கு மலர் தூவி அஞ்சலியும் செலுத்தினார்.

இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கெஜ்ரிவால், அமர்நாத் புனித யாத்திரையில் மேகவெடிப்பில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சம் உதவி தொகையாக வழங்கப்படும். அவர்களது குழந்தைகள் நன்றாக படிப்பதற்கான செலவுகளையும் அரசு உறுதி செய்யும் என கூறியுள்ளார்.


Next Story