குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி


குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 30 May 2023 6:45 PM GMT (Updated: 30 May 2023 6:45 PM GMT)

குந்தாப்புரா அருகே குளத்தில் மூழ்கி பள்ளி மாணவர் உள்பட 2 பேர் பலியாகினர்.

மங்களூரு:-

கல்லூரி விரிவுரையாளர்

தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு பகுதியை சேர்ந்்தவர் ராஜேந்திரா ஷெட்டிகரா (வயது28). இவர் மங்களூருவில் உள்ள தனியார் கல்லூரியில் விரிவுரையாளராக பணியாற்றி வந்தார். இந்தநிலையில் தற்போது அவர் உடுப்பியில் உள்ள அன்னை தெரசா கல்லூரியில் பணிபுரிந்து வருகிறார். இந்த கல்லூரியின் அருகே சங்கராநாராயணா மேல்நிலைப்பள்ளி உள்ளது. அங்கு கந்தாவர் பகுதியை சேர்ந்த பரத் ஷெட்டிகரா (15) என்பவர் படித்து வந்தான். இந்த

நிலையில், ராஜேந்திரா, பரத் உள்பட 6 பேர் சுற்றுலா சென்றனர். அப்போது அவர்கள் 6 பேரும் கடினகொண்டா பாபர்யா கூட்லு குளத்தில் குளிக்க சென்றனர். அவர்கள் குளத்தில் குளித்து கொண்டு இருந்தனர். அப்போது பரத் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. அதில் அவனுக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி தத்தளித்து கொண்டு இருந்தான். இதனை பார்த்த ராஜேந்திரா பரத்தை காப்பாற்ற சென்றார். இதில் ராஜேந்திராவும் தண்ணீரில் மூழ்கினார்.

2 பேர் சாவு

இந்தநிலையில் உடன் சென்றவர்கள் காப்பாற்றும் படி கூச்சலிட்டனர். அப்பகுதியில் இருந்தவர்கள் இதுகுறித்து குந்தாப்புரா தீயணைப்பு படையினர், போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் குதித்து 2 பேரை தேடும் பணியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. சுமார் 2 மணி நேரம் போராடி ராஜேந்திரா மற்றும் பரத்தை தீயணைப்பு வீரர்கள் பிணமாக மீட்டனர். பின்னர் அவர்கள் 2 பேரின் உடல்களையும் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குந்தாப்புரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளி மாணவர் உள்பட 2 பேர் குளத்தில் மூழ்கி இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


Next Story