பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அத்வானி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி


பாபர் மசூதி இடிப்பு வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய அத்வானி உள்ளிட்டோரின் மனுக்கள் தள்ளுபடி
x
தினத்தந்தி 30 May 2017 9:49 AM GMT (Updated: 30 May 2017 10:25 AM GMT)

பாபர் மசூதி வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உமாபாரதி ஆகியோர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

லக்னோ,

அயோத்தியில் அமைந்திருந்த வரலாற்று சிறப்புவாய்ந்த பாபர் மசூதி, 1992–ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 6–ந்தேதி கரசேவை நடத்தி தகர்க்கப்பட்டது.  இது தொடர்பான வழக்கில், கர சேவகர்களை தூண்டியதாக பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே.அத்வானி, முரளி மனோகர் ஜோஷி மற்றும் மத்திய அமைச்சர் உமா பாரதி உள்ளிட்டோர் மீது கூட்டு சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டது. எனினும், அத்வானி, உமாபாரதி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட 21 பேரை ரேபரேலி கோர்ட்டு 2001–ம் ஆண்டு விடுவித்தது.

இதை அலகாபாத் ஐகோர்ட்டு 2010–ம் ஆண்டு உறுதிசெய்தது. ஆனால் இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு, மீண்டும் விசாரிக்க உத்தரவிட்டது. இரண்டு ஆண்டுகளில் வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. 

இதன்படி லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி உள்ளிட்ட தலைவர்கள் இன்று  நேரில்  ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதன்படி இன்று லக்னோவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட தலைவர்கள் நேரில் ஆஜராகினர். பின்னர், அத்வானி உள்ளிட்டோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை ஏற்றுக்கொண்ட லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம், அத்வானி உள்ளிட்ட 12 பேருக்கும் சொந்த ஜாமீன் வழங்கியது. 

தங்கள் மீது  குற்றச்சாட்டு பதிவு செய்வதில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று அத்வானி உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். ஆனால், இந்த மனுவை நிராகரித்த லக்னோ நீதிமன்றம், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உமாபாராதி ஆகியோர் மீது கிரிமினல் சதி ஆகிய பிரிவுகளின் வழக்கு குற்றச்சாட்டு பதிவு செய்தது.

Next Story