இந்தியாவில் சாலை விபத்துக்களால் தினமும் சராசரியாக 400 பேர் பலியாகின்றனர்: அதிர்ச்சி தகவல்

சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 17 பேர் இந்தியாவில் விபத்துக்களில் பலியாகின்றனர் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
மத்திய போக்குவரத்துத் துறை மந்திரி நிதின் கட்காரி, 2016 ஆண்டிற்கான விபத்து குறித்த அறிக்கையை வெளியிட்டார். அந்த அறிக்கையில் நாட்டில், கடந்த ஆண்டு சராசரியாக ஒரு மணி நேரத்திற்கு 55 சாலை விபத்துகள் நடந்து 17 பேர் உயிரிழந்திருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. ஒருநாளை கணக்கிட்டால் 400க்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் நேரிட்டுள்ளன. முந்தைய ஆண்டை காட்டிலும் சாலை விபத்துக்கள் 4.1 சதவீதம் குறைந்துள்ள போதிலும் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை 3.2 சதவீதம் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு மொத்தம் 4,80,652 சாலை விபத்துகள் ஏற்பட்டுள்ளன. அதில் 1,50,785 பேர் மரணமடைந்துள்ளனர். 4,94,624 பேர் படுகாயமடைந்துள்ளனர். அவர்களில் 46.3 சதவீதம் பேர் 18 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் ஆவர்.
மேலும் 86 சதவீதம் விபத்துகள் 13 மாநிலங்களில் ஏற்பட்டுள்ளன. அவை ”தமிழ்நாடு, மத்தியப்பிரேதேசம், கர்நாடகா, உத்தரப்பிரதேசம், ஆந்திரப்பிரதேசம், குஜராத், தெலுங்கானா, சத்தீஸ்கர், மேற்கு வங்காளம், அரியானா, கேரளா, ராஜஸ்தான் மற்றும் மகாராஷ்டிரா” ஆகும். விபத்துக்களில் 84 சதவீதம் ஓட்டுநரின் தவறு காரணமாகவே நடைபெற்றுள்ளது.
Related Tags :
Next Story