ஒரே நேரத்தில் பாராளுமன்ற, சட்டசபை தேர்தல்களை நடத்தலாம்

டெல்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய சிறுபான்மையினர் நல மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி பேசும்போது கூறியதாவது:–
புதுடெல்லி,
நாட்டின் தேர்தலில் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவேண்டியது அவசியம். ஒரே தேசம், ஒரே தேர்தல் என்ற பாதையை முன்நோக்கி நாம் செல்லவேண்டும். அதற்கு பாராளுமன்ற தேர்தலும், மாநில சட்டசபைகளுக்கான தேர்தல்களும் ஒரே நேரத்தில் நடத்தப்படவேண்டும்.
இப்படி ஒரே நேரத்தில் தேர்தல் நடந்தால் அது பொருளாதாரம் மற்றும் வளர்ச்சி நடவடிக்கைகளை சீராக பராமரிக்க உதவும். மேலும் இந்த நடைமுறையால் ஓட்டு வங்கி என்கிற அரசியல் நோய் பெரும் அளவில் தடுக்கப்படும்.
தனித்தனியாக தேர்தல் நடப்பதால், தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக மத்திய, மாநில அரசுகளின் வளர்ச்சி பணிகள் சிறிது காலம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. மேலும் அரசாங்கத்தின் பணமும் விரயமாகிறது. தற்போது, சில மாத இடைவெளிகளில் ஏதாவது ஒரு மாநிலத்தில் தேர்தல் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
பாராளுமன்றம், மாநில சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவேண்டும் என்ற யோசனைக்கு பிரதமர் மோடி, முன்னாள் ஜனாதிபதி பிரணாப்முகர்ஜி ஆகியோர் ஏற்கனவே ஆதரவாக கருத்து தெரிவித்து இருப்பது, நினைவு கூரத்தக்கது.