ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு பொருளாதார நோபல் பரிசு?

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன் (வயது 54). இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இவருக்கு கிடைக்கக்கூடும்.
புதுடெல்லி,
இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் டாக்டர் ரகுராம் ராஜன் (வயது 54).
இந்த ஆண்டுக்கான பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு இவருக்கு கிடைக்கக்கூடும். இது தொடர்பான முறையான அறிவிப்பு, ஸ்டாக்ஹோமில் நாளை (திங்கட்கிழமை) அறிவிக்கப்பட உள்ளது.
பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு யாருக்கு கிடைக்கக்கூடும் என்று ‘கிளாரிவேட் அனாலிடிக்ஸ்’ அமைப்பு கணித்துள்ளது. இந்தப் பட்டியலில் ரகுராம் ராஜனின் பெயருடன் மொத்தம் 6 பேரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
‘கிளாரிவேட் அனாலிடிக்ஸ்’ அமைப்பின் கணிப்பில் இடம் பிடித்தவர்கள், நோபல் பரிசு பெற்ற வரலாறு உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
ரகுராம் ராஜன், முந்தைய மன்மோகன் சிங் அரசால் ரிசர்வ் வங்கி கவர்னராக நியமிக்கப்பட்டவர். கடந்த ஆண்டு செப்டம்பர் 4–ந் தேதி பணி நிறைவு செய்தார். அவருக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படவில்லை.
தற்போது அவர் சிகாகோ பல்கலைக்கழகத்தில், நிதித்துறை பேராசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது பூர்விகம், தமிழ்நாடு என்பது குறிப்பிடத்தக்கது.