சமூக ஊடகங்களில் விமர்சனங்கள்: பாரதீய ஜனதாவுக்கு சகிப்பு தன்மை இல்லை என சிவசேனா குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் வரும் விமர்சனங்களை கண்டு பாரதீய ஜனதா சகிப்பு தன்மையற்ற நிலையில் உள்ளது என அதன் கூட்டணி கட்சியான சிவசேனா இன்று குற்றம் சாட்டியுள்ளது.
சிவசேனாவின் பத்திரிக்கையான சாமனாவில் எழுதப்பட்டுள்ள தலையங்கத்தில், பிரதமர், ஜனாதிபதி மற்றும் முதல் மந்திரிகள் பற்றி விமர்சனங்கள் எழ கூடாது. மக்கள் பொறுமையுடன் இருக்க வேண்டும் என்பது பாரதீய ஜனதா அரசின் நிலைப்பாடாக உள்ளது என தெரிவித்துள்ளது.
விமர்சனங்களை கண்டு பொறுக்க முடியாமல் இருப்பதற்கு பதிலாக எங்கு தவறு ஏற்பட்டுள்ளது என்ற விவரத்தினை ஆய்வு செய்து அரசு அதனை சரி செய்ய வேண்டும்.
எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசை ஆட்சியில் இருந்து நீக்குவதற்கு பயன்படுத்திய இந்த சமூக ஊடகம் ஆனது தற்பொழுது பாரதீய ஜனதாவின் முகத்திரையை கிழித்து வருகிறது.
சிலருக்காக தோண்டிய குழியில் அக்கட்சியே சிக்கி கொள்ளும் நிலையில் பாரதீய ஜனதா உள்ளது.
ஆட்சிக்கு வந்தபின்னர் தனது வாக்குறுதிகளை நிறைவேற்றாத அக்கட்சியை இளைஞர்கள் விமர்சித்து வருகின்றனர். அதனை அரசால் பொறுத்து கொள்ள முடியவில்லை. அரசாங்கம் அல்லது பாரதீய ஜனதாவை பற்றிய தங்களது கருத்துகளை வெளியிட ஒருவருக்கு சுதந்திரம் இல்லை என்பதனை பிரதமர் அறிவிக்க வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.