குஜராத் தேர்தலில் பாகிஸ்தான் தலையீடு, மணிசங்கர் அய்யர் மீது பிரதமர் மோடி புது குற்றச்சாட்டு

குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது என பிரதமர் மோடி குற்றம் சாட்டிஉள்ளார்.
ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக தொடங்கி உள்ளது. காங்கிரஸ் மற்றும் பா.ஜனதா தலைவர்கள் ஒருவர் மீது ஒருவர் கடுமையாக தாக்கி பேசிவருகிறார்கள். முதல்கட்ட பிரசாரம் முடியும்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் மணி சங்கர் அய்யர் தரமற்ற வகையில் விமர்சித்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்காக அவரை இடைநீக்கம் செய்து காங்கிரஸ் கட்சி மேலிடம் நடவடிக்கை எடுத்துள்ளது. மணிசங்கர் அய்யரும் தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்டுவிட்டார். பிரதமர் அதன்பின்னர் நடைபெறும் ஒவ்வொரு பொதுக்கூட்டத்திலும் மணிசங்கர் அய்யர் பேச்சு தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுக்களை சுமத்தி வருகிறார்.
மறுபுறம் பிரதமர் மோடி காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைவர்கள் பற்றி மட்டுமே பேசுகிறாரே தவிர குஜராத்திற்காக பேசவில்லை என காங்கிரஸ் சாடி வருகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடி குஜராத் சட்டசபைத் தேர்தலில் பாகிஸ்தான் தலையிடுகிறது என புது குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார்.
மணிசங்கர் அய்யர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேசியது தொடர்பாக காங்கிரஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தி உள்ளார்.
குஜராத் மாநிலம் பாலன்பூரில் பிரசார கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பாகிஸ்தான் முன்னாள் ராணுவ அதிகாரி சர்தார் அர்ஷாத் ராபிக், அகமது படேலை குஜராத் முதல்-மந்திரியாக்க வேண்டும் என விரும்புகிறார்? என கேள்வி எழுப்பி உள்ளார். பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த தலைவர்கள் காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசிய பின்னர் மணிசங்கர் அய்யர் என்னை கீழ்தரமாக விமர்சனம் செய்கிறார். மணிசங்கர் வீட்டில் இந்த சந்திப்பு நடந்ததாக மீடியா தகவல்கள் வெளியாகி உள்ளது. பாகிஸ்தான் தூதர், பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி, இந்தியாவின் முன்னாள் துணை ஜனாதிபதி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இந்த கூட்டத்தில் இருந்து உள்ளனர். மூன்று மணி நேரங்களுக்கு மேலாக இந்த சந்திப்பு நடந்து உள்ளது. அதற்கு மறுநாள்தான் என்னை மணிசங்கர் அய்யர் மோசமாக விமர்சனம் செய்தார். இது முக்கியமான விவகாரம்.
ஒருபுறம் பாகிஸ்தான் ராணுவம் குஜராத் தேர்தலில் தலையிடுகிறார், மற்றொருபுறம் பாகிஸ்தான் தலைவர்கள் மணிசங்கர் அய்யருடன் கூட்டம் நடத்துகிறார்கள். அதன்பின்னர் குஜராத் மக்கள் அவமதிக்கப்படுகிறார்கள். இந்த சம்பவங்கள் உங்களுக்கு சந்தேகத்தை எழ செய்யவில்லை என கூறிஉள்ளார்.
ஏற்கனவே பாகிஸ்தானுக்கு போய் கூலிப்படை அமர்த்தி என்னை கொல்வதற்கு மணிசங்கர் அய்யர் முயன்றார் என்று பிரதமர் மோடி பரபரப்பு குற்றச்சாட்டை சுமத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story