காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை கொச்சி அழைத்து செல்ல திட்டம்; 5 மாநிலங்கள் அழைப்பு


காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்களை கொச்சி அழைத்து செல்ல திட்டம்; 5 மாநிலங்கள் அழைப்பு
x
தினத்தந்தி 17 May 2018 3:13 PM GMT (Updated: 17 May 2018 3:13 PM GMT)

போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்ட நிலையில் காங்கிரஸ்- மதசார்பற்ற ஜனதா தளம் எம்.எல்.ஏ.க்கள் கொச்சி செல்கிறார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. #Congress #JDS

பெங்களூரு,

கர்நாடக முதல்–மந்திரியாக எடியூரப்பா பதவியேற்ற பின்னர், புதிய அரசு, போலீஸ் துறையில் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. 5 ஐ.பி.எஸ். அதிகாரிகளை அதிரடியாக பணி இடமாற்றம் செய்து உத்தரவிட்டது. இதற்கான அறிவிப்பு வெளியாகுவதற்கு முன்பாக ராமநகர் மாவட்டம் பிடதியில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தங்கியுள்ள சொகுசு விடுதிக்கு போடப்பட்டு இருந்த போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டது. இந்த நடவடிக்கை எடியூரப்பாவின் உத்தரவின்பேரில் மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

சொகுசு விடுதியில் போலீஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டுள்ளதால் அங்கு காங்கிரஸ் தொண்டர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கிடையே காங்கிரஸ் மற்றும் மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவர்கள் கூட்டம் நடைபெற்றது.

காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் பேசுகையில், “அவர்கள்(பா.ஜனதா) ஜனநாயகத்தை கொலை செய்கிறார்கள். நாளை வரையில் காத்திருப்போம். எங்களுக்கு சாதகமாக தீர்ப்பு வரும் என நம்புகிறோம். ஏற்கனவே நாடு முழுவதும் குழப்பமான நிலை ஏற்பட்டுவிட்டது. பீகார், கோவா, மணிப்பூர் மற்றும் பிற மாநிலங்களில் தனிப்பெரும்பான்மையாக வந்த கட்சிகள் ஆட்சியை கோர ஆரம்பித்துவிட்டார்கள், கர்நாடகாவில் இப்போது பா.ஜனதா கொண்டுவந்த பார்முலாவை கோருகிறார்கள்,” என்றார். மேலும் பாதுகாப்பு தருவோம், எங்களுடைய மாநிலத்திற்கு வந்துவிடுங்கள் என  5 மாநிலங்கள் அழைப்பு விடுத்து உள்ளதாகவும் தெரிவித்தார். 

தமிழகம், பஞ்சாப், ஆந்திரா, தெலுங்கானா உள்பட 5 மாநிலங்கள் எங்களுக்கு அழைப்பு விடுத்து உள்ளது. இதுதொடர்பாக மதசார்பற்ற ஜனதா தளம் முடிவு எடுக்கையில் நாங்கள் அதன்படி செய்வோம் எனவும் குறிப்பிட்டார் டிகே சிவகுமார். நாளை தீர்ப்பு வரும் நிலையில், விசாகப்பட்டணம், ஐதராபாத், பஞ்சாப் மற்றும் டெல்லியில் எம்.எல்.ஏ.க்களை தங்க வைக்க திட்டமிடுவதாகவும் தகவல்கள் வெளியாகியது. குமாரசாமி பேசுகையில் எங்களுடைய எம்.எல்.ஏ.க்களுக்கு பாதுகாப்பு அளிப்பது எங்களுடைய கடமையாகும் என்றார். காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்களை பஞ்சாப் அல்லது கேரளாவில் தங்க வைக்க முடிவு செய்து உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதற்கிடையே கர்நாடக அரசியல் நிலவரம் தொடர்பாக தேவேகவுடா, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியிடம் பேசிஉள்ளார். 


Next Story