தலைமைச்செயலாளர் தாக்கப்பட்ட விவகாரம் கெஜ்ரிவாலிடம் போலீஸ் விசாரணை

டெல்லி முதல்–மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 19–ந் தேதி இரவு ஆலோசனை கூட்டம் நடந்தது.
புதுடெல்லி,
ஆலோசனை கூட்டத்தில் அரசு தலைமைச்செயலாளர் அன்ஷூ பிரகாஷ் கலந்து கொண்டார். அப்போது அவரிடம் ஆளும் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.க்கள் அத்துமீறி தவறாக நடந்து கொண்டதுடன், தாக்கினர் என புகார் எழுந்தது.
இது தொடர்பாக கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ. அமனத்துல்லா உள்ளிட்டவர்கள் மீது அன்ஷூ பிரகாஷ் அளித்த புகாரின் பேரில் டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர்.
இதையடுத்து டெல்லி (வடக்கு) கூடுதல் துணை போலீஸ் கமிஷனர் ஹரேந்திர சிங் தலைமையில் 6 பேரை கொண்டு குழுவினர், கெஜ்ரிவால் வீட்டுக்கு நேற்று மாலை சென்று அவரிடம் விசாரணை நடத்தினர்.
அவர் தன்னிடம் நடத்துகிற விசாரணையை வீடியோவாக பதிவு செய்து, தனக்கும் ஒரு சி.டி. தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இந்த வழக்கில் கெஜ்ரிவாலின் தனிச்செயலாளர் பிபவ் குமாரும் கடந்த மாதம் டெல்லி போலீசாரால் விசாரிக்கப்பட்டார் என்பது நினைவுகூரத்தக்கது.